ஜார்க்கண்டில் 840 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்: பிகாரைச் சேர்ந்த 6 பேர் கைது
ஜார்க்கண்டில் 840 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்ததோடு பிகாரைச் சேர்ந்த 6 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஜார்க்கண்டில் 840 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்ததோடு பிகாரைச் சேர்ந்த 6 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஜார்க்கண்டின் பலாமு மாவட்டத்தில் காரின் பாதுகாப்புடன் பிக்கப் வேன் மூலம் பிகாருக்கு கள்ளச்சாராயம் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சட்டர்பூர்-ஜப்லா பிரதான சாலையில் உள்ள ஒயின் கடைக்கு அருகே போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
Advertisement
அப்போது வாகனம் ஒன்றை சோதனையிட்டபோது, அதிலிருந்து 840 லிட்டர் கள்ளச்சாராயம் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வாகனத்தில் இருந்த 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இருப்பினும், பிக்கப் வேனுக்குப் பாதுகாப்பு அளித்த கார் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.
குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரும் பிகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
விசாரணையின் போது, கள்ளச்சாராயம் தயாரிப்பதற்காக சாராயத்தைக் கொண்டு சென்றதாக அவர்கள் கூறியதாக சட்டர்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அவத் குமார் யாதவ் தெரிவித்தார்.
பிகார் மாநிலத்தில் 2016-ம் ஆண்டு முதல் பூரண மதுவிலக்கு சட்டம் அமலில் இருந்து வருகிறது. சட்டம் அமலில் இருக்கும் போதும் அங்கு கள்ளச்சாராயம் விற்பனையும் அதுதொடர்பான மரணங்களும் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.