மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது!
மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது தொடர்பாக...
மேற்கு வங்கத்தில் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப். 29-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரசாரம் இன்று(ஏப். 27) மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.
294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு இரு கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப். 23-ஆம் தேதி பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தல் நாளில் ஆங்காங்கே அரசியல் கட்சியினர் இடையே மோதல்கள் மற்றும் வன்முறைகள் நிகழ்ந்தன. வாக்காளர்கள் மிரட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனினும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
Advertisement
இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இன்று மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்தனர்.
முதல்வர் மமதா பானர்ஜி இன்று மாலை பிரசாரம் முடிவதற்கு சில மணி நேரம் முன்பு தலைநகர் கொல்கத்தாவில் நடைப்பயணம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் இன்று மாலை 6 மணியுடன் அனல் பறந்த தீவிர பிரசாரம் நிறைவடைந்தது.
மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்.23-இல் நடைபெற்ற முதல்கட்டத் தோ்தலில் வரலாறு காணாத அளவில் 93.19 சதவீத வாக்குகள் பதிவானதாக, தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 3.61 கோடி பேர். இவர்களில் 3.36 கோடி பேர் (1.71 கோடி ஆண்கள், 1.65 கோடி பெண்கள்) வாக்களித்துள்ளனர்.
ஆளும் திரிணமூல் காங்கிரஸ், முக்கிய எதிர்க்கட்சியான பாஜக இடையே போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், இடதுசாரி கூட்டணிகளும் களம் காண்கின்றன.
இரண்டாம் கட்டத் தேர்தலில் முதல்வர் மமதா பானர்ஜி (பவானிபூர்) உள்பட மொத்தம் 1,448 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பின்னர், தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
மேற்கு வங்கத்தில் தற்போதைய தேர்தலுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கையால் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.