ஜார்க்கண்டில் எந்தவொரு வாக்காளரையும் நீக்க காங்கிரஸ் அனுமதிக்காது!
எஸ்ஐஆர் மூலம் ஜார்க்கண்டில் எந்தவொரு வாக்காளரையும் நீக்க காங்கிரஸ் அனுமதிக்காது என கே. ராஜு பேசியது குறித்து...
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நடவடிக்கையின் மூலம் ஜார்க்கண்டில் எந்தவொரு சட்டப்பூர்வ வாக்காளரையும் நீக்க காங்கிரஸ் அனுமதிக்காது என அந்தக் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் கே. ராஜு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
“மேற்கு வங்கத்தில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, முறையான அனைத்து ஆவணங்களையும் கொண்டிருந்த சுமார் 27 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் எஸ்ஐஆர் என்ற பெயரில் நீக்கப்பட்டுள்ளன.
Advertisement
ஜார்க்கண்டில் வரவிருக்கும் எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது, எந்தவொரு சட்டப்பூர்வ வாக்காளரின் பெயரையும் நீக்க காங்கிரஸ் அனுமதிக்காது.
எஸ்ஐஆர் நடவடிக்கையின் போது ஏற்படும் சிக்கல்களால், ஏராளமான மக்கள் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம். ஆவணத்தில் ஏதும் பிரச்னை இருந்தால், அதை சரிசெய்ய உதவுமாறு காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள சுமார் 29,000 வாக்குச்சாவடிகளில், 16,000-க்கும் மேற்பட்டவற்றில் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வாக்குச்சாவடி முகவர்களை (பி.எல்.ஏ.) நியமித்துவிட்டோம். மீதமுள்ள வாக்குச்சாவடிகளுக்கு முகவர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். மேலும், அவர்களுக்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
கிராம அல்லது மாவட்ட அளவில் பிரச்னைகள் இருந்தால், அவற்றைத் தீர்க்க காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்கும். மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பது காங்கிரஸின் பொறுப்பாகும்” எனத் தெரிவித்தார்.
ஜார்க்கண்டில் நடைபெறவுள்ள எஸ்ஐஆர் நடவடிக்கை குறித்த அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், மே மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.