நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகள் கோழைகள்: மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு!
யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஜான் பிரிட்டாஸ் தவறான தகவல்களை பரப்பிவருவதாக குற்றம் சாட்டி நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்தார்.
நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகள் முழு கோழைகள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் இன்று (ஆக. 10) விமர்சித்தார்.
யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி., ஜான் பிரிட்டாஸ் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜூன் 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி திருத்த மசோதா 2026-ஐ நிராகரிப்பதற்கான தீர்மானத்தை முன்மொழிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி., ஜான் பிரிட்டாஸ் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
Advertisement
Advertisement
முன்னதாக, பேசிய அவர், அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக பிரேசிலைப் போன்று யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க அரசு முடிவு செய்துள்ளதாக விமர்சித்தார். இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையானது இலவச பொதுச்சேவையாக உருவாக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார். இடையில் அவரின் பேச்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் வெளிநடப்பு செய்தார்.
இதன் பிறகு அவர் முன்மொழிந்த தீர்மானத்திற்கு பதில் அளித்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
''நான் பேசும் ஒரு வரியையாவது கேட்க வேண்டும் என்றால் தயவு செய்து அவையில் இருங்கள். ஆதாரங்கள் எதுவுமின்றி அனைவரின் மீதும் அவதூறுகளை அள்ளி வீசுவது இவர்களின் (கம்யூனிஸ்ட்) பாணி.
இதுபோன்று எதையாவது செய்துவிட்டு நான் பேச வேண்டும், அது என் உரிமை என கோரிக்கை வைப்பார்கள். ஆனால், உண்மையில் அவர்களுக்கு புள்ளி விவரங்களுடன் பதில் அளித்தால், அதனை அவர்கள் ஏற்பது இல்லை. அவர்களுக்கு அதனை எதிர்கொள்ள தைரியமில்லை. கோழைகள்.
நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகள் முழு கோழைகள், இந்த உறுப்பினர் அதனை நிரூபித்துவிட்டார். உண்மையை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. ஆனால், காலம் தாழ்த்துவதற்காக கூச்சலிடுவார்கள்'' என நிர்மலா சீதாராமன் பேசினார்.
Communists in country are total cowards: FM Sitharaman
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.