வந்தே மாதரம் அவமதிப்பு: சோனியா மன்னிப்பு கேட்க அமித் ஷா வலியுறுத்தல்!
சுதந்திர தினத்தன்று வந்தே மாதரம் பாடலை அவமதித்ததற்காக நாட்டு மக்களிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திர தினத்தன்று வந்தே மாதரம் பாடலை அவமதித்ததற்காக நாட்டு மக்களிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ராஜஸ்தான் மாநிலம், சித்தோர்கர் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:நாடு சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் உள்ள செங்கோட்டையிலும் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்ட மற்ற இடங்களிலும் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட காலத்தில் வந்தே மாதரம் பாடலைப் பாடியதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் தோட்டாக்களையும் தடியடியையும் எதிர்கொண்டனர்.
தில்லி காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வந்தே மாதரம் பாடல் பாடப்படுவதை பாதியிலேயே நிறுத்துமாறு கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை சோனியா காந்தி கேட்டுக்கொண்டார். நாம் இதைத் தொலைக்காட்சியில் கண்டோம்.
Advertisement
Advertisement
வந்தே மாதரம் பாடலை அவமதித்ததற்காக காங்கிரஸ் கட்சியும் சோனியா காந்தியும் நாட்டு மக்களிடமும் அப்பாடலை இயற்றிய பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ஆன்மாவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். உங்களுக்கு (காங்கிரஸ்) வெட்கமிருந்தால் உங்கள் கைகளைக் கூப்பி மன்னிப்பு கேளுங்கள். வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி வந்தே மாதரம் பாடலை மறந்துவிட்டது என்றார் அவர்.
காங்கிரஸ் மீது பாஜக விமர்சனம்: தேசபக்தி மிகுந்த எந்த விஷயத்தையும் எதிர்ப்பது காங்கிரஸின் கொள்கை என்று பாஜக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வந்தே மாதரம் பாடல் பாடப்படுவதை நிறுத்துமாறு சோனியா காந்தி கூறியுள்ளார். அந்த விடியோ காட்சியை உற்று கவனித்தால் வந்தே மாதரம் பாடல் பாடப்படும்போது அதை நிறுத்துமாறு சோனியா காந்தி கைகளால் சைகை செய்வது தெளிவாகத் தெரியும். அவர் இரண்டாவது முறையாகவும் அப்பாடலை நிறுத்துமாறு கூறுவது தெரிய வருகிறது.
சுதந்திர தினத்தன்று ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது நகர்ப்புற நக்ஸல் மனநிலையைக் காட்டுகிறது. எந்த தேசபக்தராவது, அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள எந்த இந்தியராவது சுதந்திர தினத்தன்று வந்தே மாதரம் பாடல் பாடப்படுவதைக் கண்டு கோபமடைவாரா?
இவ்வாறு செய்ததன் மூலம் சுதந்திரப் போராட்ட வீரர்களை மட்டுமின்றி நாட்டின் அரசியல் சாசனம், இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் 140 கோடி மக்களையும் காங்கிரஸ் கட்சி அவமதித்துள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சி 24 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரதீப் பண்டாரி தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.