ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து! அரசு அலுவலர்கள் போராட்டம் வெடித்தது!
ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்தை கண்டித்து அரசு அலுவலர்கள் போராட்டம் பற்றி...
ஜார்க்கண்ட்டில் நடைபெற்ற அரசுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு அலுவலர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தோ்வாணையம் (பிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் தேர்வு, ஜேஎஸ்எஸ்சி உள்ளிட்ட தேர்வுகளில் வினாத்தாள்கள் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி, 3 வாரங்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி கடந்த ஆக. 10 ஆம் தேதி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், சட்டப்பேரவையை நோக்கி பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.
Advertisement
Advertisement
போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். மேலும் தண்ணீரை பீய்ச்சியடித்து கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் பயன்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் டிஎஸ்ஆா் டேட்டா பிராஸஸ்ஸிங் நிறுவனம் என்ற ஒப்பந்த நிறுவனம் மூலம், மாநிலத்தில் நடத்தப்பட்ட அனைத்து வேலைவாய்ப்புத் தேர்வுகள், ஜேஎஸ்எஸ்சி - சிஜிஎல் தேர்வு ஆகியவற்றை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். இதனால், மாணவர்கள் தங்களது போராட்டத்தைத் திரும்ப பெறுவதாக அறிவித்தனர்.
ஜார்க்கண்ட் அரசின் உத்தரவின் மூலம், கடந்த 12 ஆண்டுகளில் அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 2,000 பேரின் பணி நியமனங்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் அரசால் ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் மூலம் அரசு பணிகளை பெற்றவர்கள், தலைமை செயலகத்தின் முன்பு கொட்டும் மழையில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர் அமலாக்க அலுவலரான ஆஷிஷ் மின்ஸ் செய்தியாளருடன் பேசுகையில், “அரசின் இந்த முடிவால் நாங்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளோம். வேறு வேலைகளைச் செய்துகொண்டே அரசுப் பணிக்காக நான் படித்துத் தயாரானேன். தேர்வு நடைமுறையின் மூலமே இந்தப் பணியைப் பெற்றேன்.
தற்போது ஒன்றுமில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எங்கள் பணி திடீரென, ஒரே இரவில் திரும்பப் பெறப்பட்டது மிகுந்த கவலையளிக்கிறது. நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதை நிரூபியுங்கள், அதன் பிறகு என்னை நீக்குங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Jharkhand exams cancelled! Protests by government employees erupt!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.