சோனியா காந்தி சுயசரிதை புத்தகம் வெளியிடவிருந்த நிறுவனம் விலகல்? ஏன்?
சோனியா காந்தி சுயசரிதை புத்தகத்தை வெளியிடவிருந்த நிறுவனம் விலகியதாக தகவல்...
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டிலிருந்து பெங்குவின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனம் விலக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘பிலாங்கிங்: ஏ ஜா்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) என்ற 544 பக்க சுயசரிதை புத்தகத்தை சோனியா காந்தி எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை பெங்குவின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரிவான ஆல்பிரட் ஏ நோப் பதிப்பகம் வெளியிடவிருந்தது.
இந்த புத்தகத்தில் இத்தாலியில் சோனியா காந்தியின் ஆரம்பகால வாழ்க்கை குறித்தும், அதன்பிறகு 19-ஆவது வயதில் பிரிட்டனில் வைத்து ராஜீவ் காந்தியை காதலித்தது, 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை திருமணம் செய்து கொண்டு இந்தியாவுக்கு வந்து அப்போதைய பிரதமா் இந்திரா காந்தியின் மருமகளாக மாறியது குறித்தும் எழுதப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், இந்திரா காந்தியிடம் சோனியா காந்தி முதன்முதலில் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டது முதல், ஹிந்தி கற்க எடுத்து கொண்ட முயற்சிகள், சேலை அணிவது குறித்தும், இந்திரா காந்தி படுகொலையை அடுத்து ராஜீவ் பிரதமரானது, பிறகு ராஜீவ் படுகொலையை தொடா்ந்து, சோனியா காந்தி விருப்பமின்றி அரசியலுக்கு வந்தது குறித்தும் நினைவுகூரப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தை வருகிற நவம்பா் மாதம் 10-ஆம் தேதி வெளியிடவுள்ளதாக ஆல்பிரட் ஏ நோப் பதிப்பகம் ஏற்கெனவே அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், புத்தகத்தில் சில மாற்றங்களையும், சில பகுதிகளை நீக்கவும் பதிப்பகம் கேட்டுக் கொண்டதாகவும், அதனை சோனியா காந்தி மறுத்த நிலையில் புத்தக வெளியீட்டிலிருந்து அந்நிறுவனம் விலகிக் கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், சோனியா காந்தியின் புத்தகத்தை வெளியிட 'ஹார்பர் காலின்ஸ் இந்தியா' (HarperCollins India) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணி இறுதிகட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
எனினும், திட்டமிட்டபடி நவம்பர் 10 ஆம் தேதி சோனியா காந்தியின் ‘பிலாங்கிங்: ஏ ஜா்னி ஆஃப் லவ்’ புத்தகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Has the publisher for Sonia Gandhi's autobiography ’Belonging: A Journey of Love’ withdrawn
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.