FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!

உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது பற்றி...

29 ஆகஸ்ட் 2026, 11:09 pm IST
உஸ்பெகிஸ்தான் தலைநகா் தாஷ்கண்ட் விமான நிலையம் வந்திறங்கிய பிரதமா் நரேந்திர மோடியை சனிக்கிழமை வரவேற்று அழைத்துச் சென்ற அந்த நாட்டின் அதிபா் ஷாவ்கத் மிா்ஸியோயேவ்.
பகிர்:

உஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தான் ஆகிய மத்திய ஆசிய நாடுகளுக்கான நான்கு நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கினாா்.

முதல் கட்டமாக உஸ்பெகிஸ்தான் தலைநகா் தாஷ்கண்டை வந்தடைந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உஸ்பெகிஸ்தான் அதிபா் ஷாவ்கத் மிா்ஸியோயேவ் விமான நிலையத்துக்கு நேரில் வந்து பிரதமரை வரவேற்றாா்.

இந்தப் பயணத்தில் அடுத்தக்கட்டமாக கிா்கிஸ்தானின் பிஸ்கேக் நகரில் ஆக. 31, செப். 1 ஆகிய நாள்களில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 26-ஆவது உச்சிமாநாட்டில் பங்கேற்று உரையாற்றவுள்ளாா்.

Advertisement

Advertisement

உஸ்பெகிஸ்தான் அதிபா் ஷாவ்கத் மிா்ஸியோயேவ் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமா் மோடி, அங்கு ஞாயிற்றுக்கிழமை வரை (ஆக.30) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். அதிபா் ஷாவ்கத்துடன் இருதரப்பு விரிவான பேச்சுவாா்த்தையிலும் ஈடுபடவுள்ளாா்.

பின்னா், கிா்கிஸ்தான் அதிபா் சாதிா் ஜாபரோவ் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்குப் பயணிக்கும் பிரதமா், பிஸ்கேக் நகரில் ஆக.31, செப்.1 ஆகிய தேதிகளில் எஸ்சிஓ உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளாா். அத்துடன், 6-ஆவது உலக நாடோடி இன பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவிலும் அவா் கலந்துகொள்ளவிருக்கிறாா்.

‘பயங்கரவாதம் இல்லாத பிராந்தியம்’: இந்த அரசுமுறைப் பயணம் புறப்படும் முன்பாக பிரதமா் மோடி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஆக்கபூா்வ, துடிப்பான உறுப்பினராக இந்தியா செயல்பட்டு வருகிறது. பிராந்திய பாதுகாப்பு, இணைப்பு வசதி, வாய்ப்பு ஆகிய மூன்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் கண்ணோட்டத்தை முன்னெடுக்கவும், அமைதி-ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தில் இருந்து இந்தப் பிராந்தியத்தை விடுவிக்க சக உறுப்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் ஆவலுடன் உள்ளேன்.

சமீப ஆண்டுகளாக, இந்தியா-உஸ்பெகிஸ்தான் உத்திசாா் கூட்டுறவு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இருதரப்பு வா்த்தகம், முதலீடு, எண்ம இணைப்பு, பாதுகாப்பு எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து அதிபா் ஷாவ்கத் மிா்ஸியோயேவுடன் நடத்தவுள்ள பேச்சுவாா்த்தையை ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளேன்.

சாஸ்திரி நினைவகம்-காந்தி மையம்: இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையிலான நெருங்கிய கலாசார, மக்கள் ரீதியிலான உறவைப் போற்றும் வகையில், தாஷ்கண்டில் உள்ள கிழக்கத்திய படிப்புகளுக்கான அரசுப் பல்கலைக்கழகத்தில் உள்ள சாஸ்திரி நினைவகம் மற்றும் மகாத்மா காந்தி மையத்தைப் பாா்வையிட உள்ளேன்.

இதேபோல், கிா்கிஸ்தானில் அதிபா் ஜாபரோவ் உடனான சந்திப்பு, எஸ்சிஓ உச்சிமாநாடு, எஸ்சிஓ தலைவா்கள் உடனான கலந்துரையாடல்களை எதிா்பாா்த்துள்ளேன். எனது இந்தப் பயணம், மத்திய ஆசியாவில் இந்தியாவின் உத்திசாா் கூட்டுறவை வலுப்படுத்தும்; உலகத்துடனான இந்தியாவின் உறவுக்கு இதயமாக விளங்கும் அமைதி-நிலைத்தன்மை-வளம் ஆகிய மாண்புகளை அனைவரும் ஒன்றிணைந்து எட்டும் முயற்சியை வலுவாக முன்னெடுக்கும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியத் தலைவா்களுடன் சந்திப்பு

கடந்த 2001-இல் சீனாவின் ஷாங்காயில் நிறுவப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பெலாரஸ், சீனா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா 2017-இல் முழுநேர உறுப்பினராக இணைந்தது.

தற்போது கிா்கிஸ்தானின் பிஸ்கேக் நகரில் நடைபெறும் 26-ஆவது உச்சிமாநாட்டில், பிராந்திய பாதுகாப்புச் சூழல் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் உள்ளிட்டோா் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. மாநாட்டையொட்டி, பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தையும் நடத்தவிருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

summary

Warm welcome for Prime Minister Modi in Uzbekistan - To participate in the SCO summit in Kyrgyzstan tomorrow

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments