கேரளத்தின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் யார்? இடதுசாரிகள் இடையே தொடரும் மோதல்!
கேரளத்தின் இடதுசாரிகள் கூட்டணிக்குள் வெடித்துள்ள மோதல் குறித்து...
கேரளத்தின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி யாருக்கு வழங்கப்படும் என மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் (சிபிஐ) தலைவர்கள் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது.
கேரளத்தில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து, தோல்வியடைந்த இடதுசாரிக் கூட்டணியினர் எதிர்க்கட்சிகளின் வரிசையில் அமர்ந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் இடதுசாரிக் கூட்டணியின் மூலம் கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக சிபிஎம் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பினராயி விஜயன் பதவியேற்றுக் கொண்டார்.
Advertisement
Advertisement
இடதுசாரிக் கூட்டணியின் 2 ஆவது பெரிய கட்சியான சிபிஐ எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியைத் தங்களுக்கு வழங்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இதற்கு, சிபிஎம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்படுவதால், இருதரப்பினரும் பொதுவெளியில் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூட்டணி மரபுகளை சிபிஎம் மீறுவதாக சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்ட சூழலில், பதவி வேண்டுமென சிபிஐ உறுப்பினர்கள் விரும்பினால் அதுதொடர்பாக அவர்கள் கூட்டணிக்குள் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டுமென சிபிஎம் மூத்த தலைவர் மோகனன் கூறியுள்ளார்.
இதுபற்றி, கேரள மாநில சிபிஎம் இதழான தேசபிமானியில் வெளியான கட்டூரையில் அவர் கூறியதாவது,
“எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி அவர்களுக்கு வேண்டுமென்றால் இடதுசாரிக் கூட்டணியின் கூட்டத்தில் அவர்கள் இந்த விவகாரத்தை எழுப்பியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் ஊடகங்களில் இதுபற்றி பேசியது தேவையற்ற விவாதங்கள் மற்றும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது” எனக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு யாரை நியமிக்க வேண்டுமென தான் மட்டுமே அவைத் தலைவருக்குக் கடிதம் வழங்க முடியும் எனவும், அந்தப் பதவிக்கு நிச்சயம் சிபிஎம் உறுப்பினர் ஒருவரே நியமிக்கப்படுவார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் கூறியது இடதுசாரிக் கூட்டணிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
A conflict persists between leaders of the CPIM and the CPI over who will be appointed as the Deputy LOP in Kerala.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.