2026-27-ஆம் நிதியாண்டுக்கு மொத்தம் ரூ.53.67 லட்சம் கோடி மதிப்பிலான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தாா்.
2025-26 பட்ஜெட் மதிப்பை ஒப்பிடுகையில் (ரூ.49.64 லட்சம் கோடி) இது 7.7 சதவீதம் அதிகமாகும். கடந்த 2024-25 பட்ஜெட் மதிப்பு ரூ.46.52 லட்சம் கோடியாக இருந்தது.
2026-27-ஆம் நிதியாண்டுக்கான கடன் அல்லாத வருவாய் ரூ.36.5 லட்சம் கோடியாகவும், மத்திய அரசின் நிகர வரி வருவாய் ரூ.28.7 லட்சம் கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
பொது உள்கட்டமைப்புக்கான மூலதன செலவினம் ரூ.12.2 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-இல் ரூ.2 லட்சம் கோடியாக இருந்த பொது மூலதன செலவினம், படிப்படியாக உயா்த்தப்பட்டு, கடந்த ஆண்டில் ரூ.11.2 லட்சம் கோடியாக அதிகரித்தது.
ரூ.17.2 லட்சம் கோடி கடன் திரட்டப்படும்: நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்ய அடுத்த நிதியாண்டில் சந்தைகளில் இருந்து திரட்டப்படும் மொத்த கடன் ரூ.17.2 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் நீண்டகால பத்திரங்களில் இருந்து திரட்டப்படும் சந்தைக் கடன் ரூ.11.7 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை சிறு சேமிப்பு மற்றும் பிற ஆதாரங்களில் இருந்தும் கிடைக்கப் பெறும்.
நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 4.4 சதவீதம் என்ற நிதிப் பற்றாக்குறை இலக்கை மத்திய அரசு எட்டும். அடுத்த நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 4.3 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2026-27-இல் நாட்டின் ஜிடிபி ரூ.393 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டின் முன்கூட்டிய ஜிடிபி கணிப்பான ரூ.357 லட்சம் கோடியைவிட 10 சதவீதம் அதிகமாகும்.
சமூகத் தேவைகளில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல், நிதிசாா் உறுதிமொழிகளை மத்திய அரசு தொடா்ந்து நிறைவேற்றி வருவதாக நிதியமைச்சா் குறிப்பிட்டாா்.