எப்ஸ்டீன் கோப்புகளில் மோடி பெயர்! நாடாளுமன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ் நோட்டீஸ்!
எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரத்தை விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ்...
எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் குறிப்பிடப்பட்டிருப்பது பற்றி மக்களவையில் விவாதிக்கக் கோரி காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்த நிலையில், தற்போது அவரின் குற்றச் செயல்கள் அடங்கிய சுமார் 30 லட்ச பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், புகைப்படங்கள், விடியோக்கள் அடங்கிய எப்ஸ்டீன் கோப்புகளை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது இஸ்ரேல் பயணம் குறித்து சில மின்னஞ்சல் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு தரப்பில் இருந்து மறுப்பு செய்தி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், மக்களவையில் எப்ஸ்டீன் கோப்புகளின் மோடியின் பெயர் இடம்பெற்றது தொடர்பாக விவாதிக்கக் கோரி, காங்கிரஸ் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
"ஜூலை 9, 2017 தேதியிட்ட, எப்ஸ்டீனால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் ஒரு மின்னஞ்சல், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஆகியோர் சம்பந்தப்பட்ட சந்திப்புகள் மற்றும் அதைத் தொடர்ந்த இஸ்ரேலுக்கான மோடியின் அதிகாரப்பூர்வ பயணம் பற்றிக் குறிப்பிடுகிறது. இது, தற்போது உலகளவில் பரவி, கடுமையான கேள்விகளையும் ஊகங்களையும் எழுப்புகின்றன. இதுபோன்ற பிரச்னைகள் சர்வதேச அளவில் விவாதிக்கப்படும்போது இந்த அவை மௌனமாக இருக்க முடியாது, மேலும் மத்திய அரசு ஒரு தெளிவான, திட்டவட்டமான மற்றும் அதிகாரப்பூர்வமான விளக்கத்தை அளிக்கவில்லை.
நாங்கள் பிரதமரிடமிருந்து பதில்களைக் கோருகிறோம். எப்ஸ்டீனால் குறிப்பிடப்பட்ட தகவல்களின் நம்பகத்தன்மையை மத்திய அரசு சரிபார்த்ததா? எப்ஸ்டீன், இந்திய அரசுடனோ அல்லது மோடியுடனோ எப்போதாவது தொடர்பு கொண்டாரா?” என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
Modi's name in the Epstein files! Congress gives notice to discuss the matter in Parliament!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.