முகப்பு
இந்தியா

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக்கொள்ள பிரதமர் மோடி ஒப்புக்கொண்டதாகவும் டிரம்ப் பேச்சு

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 5:57 PM
பிரத்மர் மோடி | அமெரிக்க அதிபர் டிரம்ப் - கோப்புப் படம்
பகிர்:

இந்தியா மீதான வரியை 18 சதவிகிதமாகக் குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிவிக்கையில் டிரம்ப் கூறியிருப்பதாவது, "இந்தியாவின் சக்திவாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய பிரதமர் மோடி, எனது சிறந்த நண்பர்களில் ஒருவரும்கூட.

வர்த்தகம், ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருதல் உள்ளிட்ட பல விஷயங்களையும் நாங்கள் பேசினோம்.

ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்தவும், வெனிசுவேலாவிருந்தும் அதிக எண்ணெய் வாங்கவும் அவர் ஒப்புக் கொண்டார்.

ஒவ்வொரு வாரமும் உக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் பலியாகும் நிலையில், போர் முடிவுக்குக் கொண்டுவரப்படும்.

பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதை காரணமாக, அவரது வேண்டுகோளின்பேரில், அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டோம்.

இதன்மூலம், பரஸ்பர வரியை 25 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது. இதேபோல், அவர்களும் வரியைக் குறைக்க முன்வருவார்கள்.

மேலும், 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான அமெரிக்க எரிசக்தி, விவசாயம், நிலக்கரி உள்பட பல பொருள்களை வாங்குவதற்கும் பிரதமர் மோடி உறுதி கூறியுள்ளார். இந்தியாவுடனான நமது உறவு மென்மேலும் வலுவுடன் முன்னோக்கிச் செல்லும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா மீது 50 சதவிகித வரியை அமெரிக்கா விதித்த நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை மீட்க பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில்தான், பிரதமர் மோடியுடன் டிரம்ப் பேசியுள்ளார்.

summary

Trump lowers tariffs to 18% from 25%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.