இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று இரவு (பிப்.2) ஒப்புதல் தெரிவித்தார். மேலும், இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத வரியை 18 சதவீதமாக குறைப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண்மை, நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவுடனான வா்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயர்த்த இந்தியா முடிவுசெய்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க வேளாண் பொருள்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை இன்று காலை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வழங்கியிருந்தனர்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படாததால் மாநிலங்களவையில் இருந்து அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸின் கே.சி. வேணுகோபால், “மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம் நேற்று நடந்துள்ளது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்க அதிபரால் ஒருதலைப்பட்சமாக அறிவிக்கப்பட்டது. இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவுகளின் வரலாற்றில் இதுபோன்று இதற்கு முன் ஒருபோதும் நடந்ததில்லை” எனத் தெரிவித்தார்.
சிவசேனை (உத்தவ்) அணியின் எம்பி சஞ்சய் ராவத் கூறியதாவது, “தேசிய நலனும் விவசாயிகளின் நலனும் சமரசம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளோம். இந்த வர்த்தக ஒப்பந்தம் கௌதம் அதானியைக் காப்பாற்றுவதற்காகவே கையெழுத்திடப்பட்டுள்ளது என்று நான் கருதுகிறேன். நாங்கள் வீதிகளில் தொடங்கி நாடாளுமன்றம் வரை இதற்கு எதிராகப் போராடுவோம்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.