மக்களவைக்கு வரும் துணிச்சல் பிரதமர் நரேந்திர மோடிக்கு இருக்கிறதா என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.
மக்களவையில் கடந்த திங்கள்கிழமை முன்னாள் ராணுவத் தளபதி எழுதிய புத்தகத்தில் உள்ள எல்லைப் பிரச்னையை குறித்து ராகுல் காந்தி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சீன எல்லைப் பிரச்னை குறித்து பேசுவதற்கு ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நரவணே புத்தகத்தை கைகளில் எந்தியபடி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி பேசியதாவது:
”பிரதமருக்கு இன்று மக்களவைக்கு வரத் துணிச்சல் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. பிரதமர் வந்தால் நேரில் சென்று நரவணே எழுதிய புத்தகத்தை அவரிடம் நான் கொடுப்பேன். அதைப் படித்து நாட்டின் உண்மை நிலையை அறிந்துகொள்ள முடியும்.
நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் இந்தப் புத்தகத்தில் இருப்பதை படிக்க வேண்டும். இந்தப் புத்தகத்தில் லடாக் பற்றிய முழு விவரத்தையும் நரவணே எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டக்கூடாது என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. முக்கியமான வரி என்னவென்றால், பிரதமர் சொன்னதுதான் - "எதைச் சரி என்று நினைக்கிறீர்களோ அதைச் செய்யுங்கள்".
முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் நரவணே, ராஜ்நாத் சிங்கை அழைத்து, சீனப் படைகள் கைலாஷ் முகடுக்கு வந்துவிட்டன, என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது, உடனடியாகப் பதிலளிக்கவில்லை. தொடர்ந்து, ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடமும் அவர் கேட்டுள்ளார். ஆனால் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. பின்னர், மீண்டும் ராஜ்நாத் சிங்கை அழைத்தபோது, உயர்நிலைக் குழுவிடம் கேட்பதாகக் கூறியுள்ளார். உயர்நிலைக் குழுவின் நிரந்தர உத்தரவு என்னவென்றால், சீனப் படைகள் எல்லைக்குள் வந்தால், அனுமதி இல்லாமல் அவர்கள் மீது சுடக்கூடாது என்பதுதான்.
நரவணேவும், இந்திய ராணுவமும் சீனப் படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த விரும்பின. ஏனெனில், அவை இந்திய எல்லைக்குள் வந்துவிட்டன.
பின்னர், பிரதமர் மோடி, “எது சரி என்று நினைக்கிறீர்களோ அதைச் செய்யுங்கள்” என்று ஒரு செய்தியை அனுப்பினார். இதன் பொருள், நரேந்திர மோடி தனது கடமைகளைச் செய்யவில்லை, "இது என் சக்திக்கு அப்பாற்பட்டது" என்று கூறி, ராணுவத் தளபதியை அவர் விரும்பியதைச் செய்யச் சொல்லியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து புத்தகத்தில் எழுதியுள்ள நரவணே, 'நான் மிகவும் தனிமையாக உணர்ந்தேன், முழு அரசமைப்பாலும் நான் கைவிடப்பட்டேன்' என்று குறிப்பிட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.