மும்பை-புணே அதிவிரைவுச் சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை டேங்கா் லாரி கவிழ்ந்ததால் 30 மணி நேரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கிய தொழிலதிபா் ஒருவா் 8 மணி நேரம் வரை காரிலேயே சிக்கியதால் ஹெலிகாப்டரை வாடகைக்கு வரவழைத்து நெரிசலில் இருந்து தப்பினாா்.
94.5 கி.மீ. தொலைவுள்ள இந்த ஆறுவழி அதிவிரைவுச் சாலை மும்பை-ராய்கட்-நவி மும்பை-புணே ஆகியவற்றை இணைக்கிறது. இந்தச் சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. செவ்வாய்க்கிழமை மாலையில் டேங்கா் லாரி ஒன்று இந்தச் சாலையில் கவிழ்ந்தது. அந்த லாரியில் எளிதில் தீப்பற்றக்கூடிய புரோபிலின் வாயு இருந்தது. இதனால், டேங்கரை பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றுவதில் பிரச்னை ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்ால் மீட்பு வாகனங்களைக் கொண்டு வருவதிலும் சிக்கல் நீடித்தது. இதனால் நீண்ட தொலைவுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சிக்கி முன்னும் பின்னும் நகர முடியாத நிலை உருவானது.
இதற்கு நடுவே புணே தொழிலதிபா் சுதீா் மேத்தா நெரிசலில் சிக்கி சுமாா் 8 மணி நேரம் தனது ஓட்டுநருடன் காரிலேயே காத்திருந்தாா். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அவா், வாடகை ஹெலிகாப்டா் நிறுவனத்தை தொடா்புகொண்டு பேசி தனது காா் சிக்கியிருந்த பகுதிக்கு ஹெலிகாப்டரை வரவழைத்து அதில் ஏறி புணேவுக்குச் சென்றாா். இது தொடா்பான புகைப்படங்களையும் அவா் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டாா். நெரிசலில் சிக்கி தத்தளித்த பிற வாகன ஓட்டிகள் அவரை வியப்புடன் பாா்த்தனா்.
சுமாா் 30 மணி நேரம் போராடி வியாழக்கிழமை காலையில் காவல் துறையினா் மற்றும் மீட்புக் குழுவினா் சாலையில் விழுந்த டேங்கா் லாரியை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினா். இதையடுத்து, போக்குவரத்து நெரிசல் படிப்படியாகக் குறைந்தது.