நாட்டின் சில்லறை பணவீக்கத்தைக் கணக்கிடும் நுகா்வோா் விலை குறியீட்டில் (சிபிஐ) மத்திய அரசு முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஜனவரிக்கான சில்லறை பணவீக்கம் 2.75 சதவீதமாகவும், உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் 2.13 சதவீதமாகவும் புதிய முறையில் கணக்கிடப்பட்டுள்ளது.
இதுவரை 2012-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு சில்லறை பணவீக்கம் கணக்கிடப்படும். இனி 2024-ஆம் ஆண்டு அடிப்படை ஆண்டாகக் கொள்ளப்படும்.
புதிய கணக்கீட்டு முறையில் பொருள்களின் எண்ணிக்கை 259-லிருந்து 308-ஆகவும், சேவைகளின் எண்ணிக்கை 40-லிருந்து 50-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற வீட்டு வாடகை, சிஎன்ஜி, பிஎன்ஜி போன்ற எரிபொருள்கள், தொலைபேசி கட்டணங்கள், ரயில் மற்றும் விமானக் கட்டணங்கள், தபால் கட்டணங்கள், ஓடிடி சந்தாக்கள் உள்ளிட்ட தரவுகள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளன.
தற்போதைய எண்ம பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப, பொதுமக்களின் உண்மையான அன்றாட செலவுகளைத் துல்லியமாகக் காட்டவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகப் புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த டிசம்பரில் சில்லறை பணவீக்கம் 1.33 சதவீதமாக இருந்தது. இது 2012-ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட பழைய முறையில் கணக்கிடப்பட்டது.