ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் புதிய 'விரைவு தபால்' கட்டணங்கள்: முழு விவரங்கள்..!
நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் 'விரைவு தபால்' உள்ளிட்ட பல்வேறு தபால் சேவைகளுக்கான கட்டணங்கள் குறித்து...
புது தில்லி: நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் 'விரைவு தபால்' உள்ளிட்ட பல்வேறு தபால் சேவைகளுக்கான கட்டணங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது. மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கத்திலும், கட்டணத்தை முறைப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தபால் துறை முதன்முறையாக 'கடிதங்கள்(ஆவணங்கள்)' மற்றும் 'பார்சல்கள்' ஆகியவற்றுக்கான வரையறையை அறிவித்துள்ளது. இதில் கடிதங்கள், அச்சிடப்பட்ட பொருள்கள் மற்றும் மறுவிற்பனை மதிப்பு இல்லாத அச்சிடப்பட்ட அல்லது இலவசமாக வழங்கப்படும் பொருள்கள் ஆகியவை அடங்கும். இத்தகைய பொருள்களுக்குக் குறைவான கட்டணங்களே வசூலிக்கப்படும்; அதேசமயம் மற்ற அனைத்துப் பொருள்களும் 'பார்சல்' வகையின் கீழ் வரும்.
மேலும், சில்லறை மற்றும் மொத்த வாடிக்கையாளர்களுக்கான '24 விரைவு தபால்' மற்றும் '48 விரைவு தபால்' சேவைகளுக்கான கட்டணங்களையும் இந்திய தபால் துறை அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
'24 விரைவு தபால்' சேவையானது 24 மணி நேரத்திற்குள்ளும், '48 விரைவு தபால்' சேவையானது 48 மணி நேரத்திற்குள்ளும் பொருள்களை விநியோகிக்கும். இவை 'ஆவணங்கள்' வகையின் கீழ் வருகின்றன
அறிவிப்பின்படி, வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைகள் தொடர்பான பொருள்கள் - அதாவது வரவேற்புத் தொகுப்புகள், கடிதங்கள், சேமிப்புக் கணக்கு புத்தகங்கள், காசோலை புத்தகங்கள், வங்கி விவரங்கள், பிளாஸ்டிக் அட்டைகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் ஆகியவை கடிதங்கள் வகையின் கீழ் வகைப்படுத்தப்படும்.
மேலும், பான் கார்டுகள், ஆதார் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுகள்(பாஸ்போர்ட்) மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் போன்ற அரசு ஆவணங்களும் இந்த கடிதங்கள் வகையிலேயே அடங்கும்.
மேலும், 500 கிராம் வரை எடையுள்ள வணிகம் சாராத பொட்டலங்கள் - உதாரணமாக ராக்கி உறைகள், வணிக மதிப்பு இல்லாத அச்சிடப்பட்ட பாக்கெட்டுகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் - ஆகியவையும் கடிதங்கள் வகையிலேயே அடங்கும். இவற்றைத் தவிர மற்ற அனைத்துப் பொருள்களும் பார்சல் வகையின் கீழ் அனுப்பப்படும்.
சில்லறை வாடிக்கையாளர்களுக்கான கட்டணங்கள் எவ்வளவு?
சில்லறை வாடிக்கையாளர்களுக்கான தற்போதைய கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை; ஆனால் கடிதங்கள்(ஆவணங்கள்) வகையின் கீழ் மொத்தமாக முன்பதிவு செய்வதற்கான புதிய கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 1 முதல், '24 விரைவு தபால்' சேவையின் கீழ், சில்லறை வாடிக்கையாளர்களுக்கான கட்டணம் எடை மற்றும் அவற்றை சென்று சேர்க்கும் தூரத்தைப் பொறுத்து ஒரு கடிதங்களுக்கு ரூ. 38 முதல் ரூ. 186 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 கிராமுக்கும் குறைவான எடையுள்ள பொருள்களுக்கு, உள்ளூர் முகவரிகளுக்கான கட்டணம் ரூ. 38 ஆகவும், நாட்டின் பிற பகுதிகளுக்கு அனுப்புவதற்கு ரூ. 94 ஆகவும் (இதனுடன் ஜிஎஸ்டி கூடுதல்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
51 முதல் 250 கிராம் வரையிலான பொருள்களுக்கு ரூ. 118-154 வரையிலும், 251 முதல் 500 கிராம் வரையிலான பாக்கெட்டுகளுக்கு ரூ. 140-186 வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மொத்த வாடிக்கையாளர்களுக்கான புதிய கட்டணங்கள் எவ்வளவு?
மொத்த வாடிக்கையாளர்களுக்கு, 24 மணிநேர விரைவு தபால் சேவைக்கான கட்டணம் ரூ. 38 முதல் ரூ. 100 வரையிலும், 48 மணிநேர சேவைக்கான கட்டணம் ரூ. 48 முதல் ரூ. 72 வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
48 மணிநேர விரைவு தபால் சேவையின் கீழ், சில்லறை வாடிக்கையாளர்கள் எடை மற்றும் தூரத்தைப் பொறுத்து ஒரு பாக்கெட்டுக்கு ரூ. 61 முதல் ரூ. 121 வரை செலுத்த வேண்டியிருக்கும் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஆவணங்கள் மற்றும் பார்சல்களை விரைவாக விநியோகம் செய்வதற்காக, "24 விரைவு தபால்", "48 விரைவு தபால்" மற்றும் "24 விரைவு தபால் பார்சல்" போன்ற புதிய பிரீமியம் சேவைகளை இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியது.
இந்த சேவைகள் தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய ஆறு நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றன.
இவை தற்போது நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருவதால் கடிதங்கள் மற்றும் பார்சல்கள் தனித்தனியாக வகைப்படுத்தி, அதற்கேற்ற கட்டணத்தில் அனுப்பும் வசதி அனைத்து வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
மக்கள் அனுப்பும் பொருள்களின் எடை மற்றும் அவை சென்று சேர்க்கப்படும் தூரத்தைக் கணக்கில் கொண்டு கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி குறைந்தபட்சமாக ரூ.38 முதல் அதிகபட்சமாக ரூ.186 வரை புதிய கட்டணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளுக்கு ஏற்பபொருத்தமான சேவைகளை தேர்வு செய்து பயன்படுத்தி பயன் பெறலாம்.
மறுவிற்பனை செய்யக்கூடிய பொருள்கள் அனைத்தும் பார்சல் பிரிவில் சேர்க்கப்படும்.
இந்திய தபால் துறையின் இந்தி புதிய அறிவிப்பு மக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
புதிய கட்டணங்கள் குறித்த விவரங்கள் தபால் அலுவலகங்களின் தகவல் பலகையில் வெளிப்படையாகப் பதிவிடப்பட்டு வருகின்றன.
இந்த புதிய கட்டமைப்பு இந்திய தபால் சேவைகளை நவீனமாக்குவதுடன் துரிதப்படுத்துவதற்கும் பெரிதும் உதவும் என அனைத்து தரப்பிலும் கூறப்படுகிறது.
For the first time, the Department of Posts has notified the definition of a document, which will include letters, printed items, and complimentary items that have no resale value.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.