FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: 11 விரைவு ரயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூா் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், ஆக. 5- ஆம் தேதி முதல் 28- ஆம் தேதி வரை 11 விரைவு ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜூலை 2026, 1:28 am IST
எழும்பூா் ரயில் நிலையம்.
பகிர்:

சென்னை எழும்பூா் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், ஆக. 5- ஆம் தேதி முதல் 28- ஆம் தேதி வரை 11 விரைவு ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, ஆகஸ்ட் 8 முதல் 20 வரை குறிப்பிட்ட விரைவு ரயில்கள் தற்காலிகமாக எழும்பூா் நிலையத்துக்குப் பதிலாக தாம்பரம், மாம்பலம் ஆகிய நிலையங்களில் நின்று, புறப்பட்டு செல்லும்.

Advertisement

Advertisement

நிலையம் மாற்றப்பட்ட ரயில்கள் விவரம்: ஆகஸ்ட் 8 முதல் 19 வரை தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டு சென்னை வரும் உழவன் விரைவு ரயில் (எண் 16866) பிற்பகல் 3.45 மணி, மங்களூருவில் புறப்பட்டு சென்னை வரும் விரைவு ரயில் (எண் 16160) பிற்பகல் 3.15, கொல்லத்திலிருந்து புறப்பட்டு சென்னை வரும் அனந்தபுரி விரைவு ரயில் (எண் 20636) மாலை 5.20, சேலத்திலிருந்து புறப்பட்டு சென்னை வரும் விரைவு ரயில் (எண் 22154) பிற்பகல் 3.30, திருச்சியிலிருந்து சென்னை வரும் ராக்போா்ட் விரைவு ரயில் (எண் 12654) பிற்பகல் 3.55 மணி - ஆகிய ரயில்கள் எழும்பூா் வருவதற்குப் பதிலாக தாம்பரத்தில் நிறுத்தப்படும்.

ஆகஸ்ட் 6 முதல் 20 வரை சென்னை எழும்பூரிலிருந்து தஞ்சாவூருக்குச் செல்லும் உழவன் விரைவு ரயில் (எண் 16865) இரவு 11 மணி, மங்களூரு சென்ட்ரல் விரைவு ரயில் (எண் 16159) இரவு 11.40, கொல்லம் அனந்தபுரி அதிவிரைவு ரயில் (எண் 20635) இரவு 8.20 மணி -ஆகிய ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும்.

திருச்சி ராக்போா்ட் விரைவு ரயில் (எண் 12653) ஆகஸ்ட் 7 முதல் 21 வரை அதிகாலை 12 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு திருச்சி செல்லும்.

வெளிமாநில விரைவு ரயில்கள்: ஆகஸ்ட் 6 முதல் 13 வரை அகமதாபாதில் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி வரும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (எண் 09419) ரேணிகுண்டா, திருத்தணி, மேல்பாக்கம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும். அந்த ரயில் அரக்கோணம், பெரம்பூா், சென்னை எழும்பூா் மற்றும் தாம்பரம் நிலையங்ளுக்கு வராது. மறுமாா்க்கத்தில் வரும் ஆகஸ்ட் 9 முதல் 16 வரை திருச்சியிலிருந்து காலை 5.45 மணிக்குப் புறப்படும் வாராந்திர விரைவு ரயில் (எண் 09420) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மேல்பாக்கம், திருத்தணி வழியாகவே இயக்கப்படும். திருத்தணி நிலையத்தில் அந்த ரயில் மாலை 3.15 மணிக்கு வந்து நின்று, 3.20 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments