உ.பி.: தலித் இளைஞர் கொலை வழக்கில் ஐந்து பேர் கைது; என்கவுன்டரில் 2 பேருக்கு காயம்
உத்தரப் பிரதேசத்தில் தலித் இளைஞர் கொலை வழக்கில் மூன்று குற்றவாளிகள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்
உத்தரப் பிரதேசத்தில் தலித் இளைஞர் கொலை வழக்கில் மூன்று குற்றவாளிகள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், ரஸ்ராவின் குர்குஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த சத்ய பிரகாஷ் ராம்(30), சனிக்கிழமை மதியம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சவாரா கிராமத்தில் உள்ள மதுக்கடை அருகே ஏற்பட்ட தகராறில் 3 பேர் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சத்ய பிரகாஷ் ராமின் சகோதரர் ஓம் பிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில், சவாரா கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் சிங், ராஜா சிங் மற்றும் உமாகாந்த் பாண்டே ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சம்பவம் நடந்த உடனே உமாகாந்த் பாண்டே கைது செய்யப்பட்டதாக பாலியா போலீஸ் கண்காணிப்பாளர் ஓம்விர் சிங் தெரிவித்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் நவபுரா-மஹத்வர் சாலையில் வாகன சோதனையின் போது, இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு சந்தேக நபர்களை நிற்குமாறு போலீஸார் கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர்கள் தப்பிக்க முயன்று போலீஸை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தொடர்ந்து, போலீஸார் மற்றும் சிறப்பு அதிரடிப் படை குழுவினர் தற்காப்புக்காக திருப்பிச் சுட்டனர்.
Advertisement
இதில் காயமடைந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சுந்தரம் சிங் (21) மற்றும் ராஜ் சிங் (24) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் மாவ் மாவட்டத்தைச் சேர்ந்த அனுஜ் சிங் (19) மற்றும் அஜய் கர்வார் (18) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள், இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கத்தி ஆகியவற்றையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.