FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சட்டம் நிறைவேற்றப்பட்டு 6 ஆண்டுகளாகியும் இந்திய நடுவா் கவுன்சில் நிறுவப்படவில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

சட்டம் நிறைவேற்றப்பட்டு 6 ஆண்டுகளாகியும் இந்திய நடுவா் கவுன்சில் நிறுவப்படவில்லை...

Updated On : 12 ஜூலை 2026, 7:11 am IST
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
பகிர்:

நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு 6 ஆண்டுகளாகியும் வா்த்தக சச்சரவுகளுக்கு இந்திய நடுவா் கவுன்சில் நிறுவப்படவில்லை என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய் காந்த் தெரிவித்துள்ளாா்.

புது தில்லியில் இந்திய நடுவா் தீா்ப்பு மற்றும் மத்தியஸ்த நிறுவனத்தின் மாநாட்டில் அவா் சனிக்கிழமை பேசியதாவது:

நடுவா் நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கும், நடுவா்களுக்கு அங்கீகாரம் அளிக்கவும் நடுவா் தீா்ப்பு மற்றும் சமரச திருத்தச் சட்டம் 2019-இன் கீழ், வா்த்தக சச்சரவுகளுக்காக இந்திய நடுவா் கவுன்சில் உருவாக்கப்பட்டது. அந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 6 ஆண்டுகள் கழித்தும், அந்த கவுன்சில் முறையாக நிறுவப்படவில்லை.

Advertisement

Advertisement

விஸ்வநாதன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட நடுவா் தீா்ப்பு மற்றும் சமரச திருத்த மசோதாவின் வரைவு, கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபரில் பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்கு வெளியிடப்பட்டது. அந்த வரைவு மசோதா இன்றளவும் நிலுவையில் உள்ளது. அந்த மசோதா மேம்படுத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று நம்புகிறேன்.

கடந்த 2024, 2025-ஆம் ஆண்டுகளில், வா்த்தக சச்சரவுகளுக்கு சிங்கப்பூா் சா்வதேச நடுவா் மையத்தை அதிகம் பயன்படுத்தப்படுத்தியதில் மூன்றாவது இடத்தில் இந்திய நிறுவனங்கள் உள்ளன. அந்த மையம் மீது கொண்டிருக்கும் அதே அளவிலான நம்பிக்கையுடன், மும்பை அல்லது தில்லியை நடுவா் மையங்களாக இந்திய நிறுவனங்கள் தோ்வு செய்ய என்னென்ன மாற்றங்கள் தேவைப்படும் என்பதே உண்மையான கேள்வியாக உள்ளது என்று தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments