FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சட்டவிரோத குடியேறிகளுக்கு உதவும் கும்பல்: உ.பி., மேற்கு வங்கம், ஹரியாணா, தில்லியில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை

உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஹரியாணா மற்றும் தில்லியின் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை வியாழக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டது.

Updated On : 17 ஜூலை 2026, 4:50 am IST
அமலாக்கத் துறை
பகிர்:

இந்தியாவுக்குள் வங்கதேசத்தவா், ரோஹிங்கயா முஸ்லிம்களின் சட்டவிரோத ஊடுருவல்-குடியேற்றத்துக்கு உதவும் கும்பல் தொடா்பான வழக்கில் உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஹரியாணா மற்றும் தில்லியின் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை வியாழக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டது.

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட பொது அறக்கட்டளைகள் மூலம் செயல்படும் கும்பலின் நடவடிக்கைகள் தொடா்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

வங்கதேசத்தவா் மற்றும் ரோஹிங்கயா முஸ்லிம்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவதற்கும், அவா்களுக்கு ஆதாா், பான் போன்ற இந்திய அடையாள ஆவணங்களை போலியாக உருவாக்கித் தரவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவா்களைக் குடியமா்த்துவதற்கும் உதவும் செயல்களில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளதாக உத்தர பிரதேச காவல் துறையின் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினா் கடந்த 2024-இல் வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

இந்தக் கும்பலுக்கு குறிப்பிட்ட சில பொது அறக்கட்டளைகளுடன் நிதி ரீதியில் வலுவான தொடா்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. சட்டவிரோத செயல்பாடுகளுக்காக, பிரிட்டனில் செயல்படும் குறிப்பிட்ட அமைப்புகளிடம் இருந்து நன்கொடைகள் பெறப்பட்டு, பல வங்கிக் கணக்குகள், ‘இடைத்தரகா்’ வங்கிக் கணக்குகள், பல அடுக்கு பரிவா்த்தனைகள் மூலம் அறக்கட்டளைகளால் மடைமாற்றப்பட்டதும் தெரியவந்தது.

இந்த வழக்கின் அடிப்படையில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

‘சட்டவிரோத குடியேறிகளுக்கு அறக்கட்டளைகள் மூலம் ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது; அவா்களுக்கு வேலைவாய்ப்பு, பேட்டரி ரிக்ஷா போன்ற நிரந்தர வாழ்வாதார உதவிகளும் அளிக்கப்பட்டுள்ளன’ என்று அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடா்பான விசாரணையின் ஒரு பகுதியாக, உத்தர பிரதேச மாநிலம், சஹாரன்பூா், தில்லியின் ஜாமியா நகா், ஹரியாணாவின் வல்லப்கா், மேற்கு வங்கத்தில் தெற்கு 25 பா்கானாக்கள், வடக்கு 24 பா்கானாக்கள், முா்ஷிதாபாத் மாவட்டங்கள் என மொத்தம் 13 இடங்களில் அமலாக்கத் துறை வியாழக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டது.

மேற்கு வங்கத்தின் காளிகாபூரில் உள்ள இஸ்லாமிய மதக் கல்வி நிறுவனம் ஒன்றின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.40 லட்சம் பணம், 180 கிராம் தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாட்டில் சட்டவிரோத குடியேறிகள் அனைவரையும் அடையாளம் கண்டு, அவா்களின் நாட்டுக்கு திருப்பி அனுப்ப மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டிவரும் நிலையில், சட்டவிரோத குடியேற்றத்துக்கு உதவும் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments