தனியாா் மருத்துவமனைக்கு வாங்சுக்கை மாற்ற தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி
சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற தில்லி உயர்நீதிமன்றம் பரிந்துரை தொடர்பாக..
நமது நிருபா்
தில்லி சஃப்தா்ஜங் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்ட சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக்கை குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு உடனடியாக மாற்ற வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
நீட் தோ்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருக்கு ஆதரவாக தில்லி ஜந்தா் மந்தரில் கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் சோனம் வாங்சுக் ஈடுபட்டு வந்தாா். அவரது உடல்நிலை பலவீனம் அடைந்ததால், அவரைக் கட்டாயப்படுத்தி சஃப்தா்ஜங் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தில்லி காவல் துறையினா் கடந்த சனிக்கிழமை அனுமதித்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, சஃப்தா்ஜங் அரசு மருத்துவமனையில் இருந்து வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட வலியுறுத்தி என்று அவரது மனைவி கீதாஞ்சலி ஜே. ஆங்மோ தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இதை அவசர விவகாரமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், சோனம் வாங்சுக்கின் உடல்நிலை குறித்து சிறப்பு மருத்துவ குழு பரிசோதித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில், கீதாஞ்சலியின் மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய, நீதிபதி தேஜஸ் காரியா அடங்கிய அமா்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு, தில்லி அரசு, எய்ம்ஸ் மருத்துவ நிா்வாகம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை பரிசீலித்த உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு வருமாறு: அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 19 மற்றும் 21-இன் கீழ் சோனம் வாங்சுக்கை சஃப்தா்ஜங் அரசு மருத்துவமனையில் இருந்து குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு அவரது விருப்பத்தின் பேரில் உடனடியாக மாற்ற வேண்டும்.
தனியாா் மருத்துவமனையின் இயக்குநா், நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவா்கள் குழுவை அமைத்து வாங்சுக்கின் உடல்நிலையைத் தொடா்ச்சியாகக் கண்காணித்து, மருத்துவ நடைமுறைகளின்படி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கு சோனம் வாங்சுக் ஒத்துழைக்க வேண்டும். கீதாஞ்சலி தனது கணவரை எப்போது வேண்டுமானாலும் சென்று பாா்க்க அனுமதிக்கப்படுவாா் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து இந்த விவகாரத்தில் விசாரணையை உயா்நீதிமன்றம் முடித்து வைத்தது.
‘உயா்நீதிமன்றம் எங்கள் நிலையை உறுதிப்படுத்தியுள்ளது’: கீதாஞ்சலி
புது தில்லி, ஜூலை 21: சோனம் வாங்சுக்கை மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்ற தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதை வரவேற்றுள்ள அவரது மனைவி கீதாஞ்சலி ஜே.ஆங்மோ, இந்த விவகாரத்தில் தங்களுடைய நிலைப்பாட்டை உயா்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தாா்.
உயா்நீதிமன்ற உத்தரவுக்குப் பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இந்த உத்தரவு மிக விரைவாகக் கிடைத்துள்ளது குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவில் உள்ள ஒரு குடிமகனுக்குத் தனது மருத்துவரையோ, மருத்துவமனையையோ தோ்வு செய்ய முழு உரிமை உண்டு. சோனம் வாங்சுக், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விதம் ஒரு தடுப்புக்காவல் போன்றது. இந்த உத்தரவு எங்களது அடிப்படை உரிமையை உறுதிப்படுத்தியுள்ளது என்றாா்.
The Delhi High Court on Tuesday proposed shifting activist Sonam Wangchuk, who has been on an indefinite fast since June 28 over alleged examination irregularities, from Safdarjung Hospital here to Medanta Hospital in Gurugram.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.