பிகாா், ம.பி., குஜராத் - 3 பேரவைத் தொகுதிகளில் இடைத்தோ்தல் வாக்குப்பதிவு
பிகாா், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள மூன்று பேரவைத் தொகுதிகளில் வியாழக்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது.
பிகாா், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள மூன்று பேரவைத் தொகுதிகளில் வியாழக்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது.
மத்திய பிரதேசத்தின் தாட்டியா தொகுதியில் அதிகபட்சமாக 71.26 சதவீதமும், பிகாரின் பங்கிபூா் தொகுதியில் குறைந்தபட்சமாக 34.24 சதவீதமும், குஜராத்தின் மாஞ்சல்பூா் தொகுதியில் 37.50 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
பிகாரின் பங்கிபூா் தொகுதியில் ஆளும் பாஜக எம்எல்ஏவாக இருந்த அக்கட்சியின் தேசியத் தலைவா் நிதின் நபின், கடந்த மாா்ச் மாதம் மாநிலங்களவை எம்.பி.யாக தோ்வானதைத் தொடா்ந்து, எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா்.
Advertisement
Advertisement
இதனால் காலியான இத்தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டு, பாஜக சாா்பில் நீரஜ் குமாா் சின்ஹா, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் ரேகா குமாரி, ஜன் சுராஜ் கட்சியின் பிரசாந்த் கிஷோா் உள்ளிட்டோா் களமிறங்கினா். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், முந்தைய தோ்தல்களைப் போலவே இம்முறையும் பங்கிபூரில் குறைவான வாக்குகளே பதிவாகின. மாலை 5 மணி நிலவரப்படி 34.24 சதவீத வாக்குகள்தான் பதிவானது.
மத்திய பிரதேசத்தின் தாட்டியா தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ராஜேந்திர பாா்தி, மோசடி வழக்கு ஒன்றில் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த ஏப்ரலில் தகுதிநீக்கத்துக்கு உள்ளானாா். இதையடுத்து, இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.
பாஜகவின் ஆசுதோஷ் திவாரி, காங்கிரஸின் கன்ஷியாம் சிங், ஆசாத் சமாஜ் கட்சியின் (கன்ஷிராம்) தாமோதா் சிங் யாதவ் உள்ளிட்டோா் போட்டியிட்ட இத்தோ்தலில் 71.26 சதவீத வாக்குகள் பதிவாகின.
குஜராத்தின் மாஞ்சல்பூா் பாஜக எம்எல்ஏவாக இருந்த யோகேஷ்பால் நாரண்தாஸ் படேல், உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் 2-ஆம் தேதி காலமானாா். இத்தொகுதி இடைத்தோ்தலில் பாஜகவின் சதீஷ் கோவிந்த்பாய் படேல், காங்கிரஸின் பிகாபாய் ராபரி ஆகியோா் முக்கிய போட்டியாளா்களாவா். இங்கு 37.50 சதவீத வாக்குகள் பதிவாகின.
தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், இடைத்தோ்தல் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.