மாணவர்கள் மீது பிரதமருக்கு அக்கறை இருந்தால் கல்வி அமைச்சரை பதவி நீக்கம் செய்திருப்பார்: ராகுல்
மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பிரதமர் பதவி நீக்கம் செய்திருப்பார் என்று ராகுல் காந்தி தெரிவித்தது பற்றி...
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) விவகாரத்தில் மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பிரதமர் பதவி நீக்கம் செய்திருப்பார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ கல்வி முறையில் மாணவா்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் திரையில் மதிப்பிடல் (ஓஎஸ்எம்) முறை மூலம் பதிவிடப்படுகிறது. இந்த நடைமுறையின் மீது மாணவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, அந்த நடைமுறையில் இருந்த சிக்கல்கள் எல்லாம் சரி செய்யப்பட்டு, மீண்டும் இன்று காலை முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சிபிஎஸ்இ தலைவரும் செயலரும் அப்பொறுப்புகளிலிருந்து மாற்றப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது.
இது குறித்து ராகுல் காந்தி தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்ததாவது:
சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலர் மாற்றப்பட்டு விட்டனர். தனிநபர் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டு விட்டது. ஆனால், உண்மையான குற்றவாளி தர்மேந்திர பிரதான் பாதுகாப்பாக உள்ளார்.
அலுவலர்கள் நீக்கப்பட்டனர். அமைச்சர் தப்பித்து விட்டார். இது பொறுப்பேற்பது அல்ல. மாறாக, மூடி மறைக்கும் செயல். இன்றும் எங்கள் கோரிக்கை மாறவில்லை. மத்திய கல்வி அமைச்சரைப் பதவி நீக்கம் செய்து, விசாரணை சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும்.
18.5 லட்சம் சிபிஎஸ்இ மாணவர்கள் மீது பிரதமருக்கு அக்கறை இருந்திருந்தால், தர்மேந்திர பிரதானை அவர் எப்போதோ பதவி நீக்கம் செய்திருப்பார் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, 12 ஆம் வகுப்பு படித்த மாணவர், பொழுதுபோக்குக்காக சிபிஎஸ்இ தளத்தை முடக்க முயன்றதாகவும், அப்போது அதில் பல பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்ததாகவும் அதனை சிஇஆர்டி-க்கு மின்னஞ்சலில் அனுப்பியதாகவும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இது சமூக ஊடகங்களில் தீவிரமாக பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.