எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் எல் நினோ! ஜூன் - ஆகஸ்ட் வரை வெய்யில்தான்: உலக வானிலை அமைப்பு!
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் எல் நினோ காரணமாக ஜூன் - ஆகஸ்ட் வரை வெப்பம் வீசும் என உலக வானிலை அமைப்பு அறிவிப்பு.
உலக வானிலை அமைப்பு வெளியிட்ட எல் நினோ முன்னறிவிப்பில், வலுவான எல் நினோ நம்மை விரைவில் நெருங்கவிருக்கிறது, எல் நினோ காரணமாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரை வெப்பமான காலநிலையை எதிர்கொள்ள மக்கள் தயாராகுங்கள் என்றும் எச்சரித்துள்ளது.
உலக வானிலை ஆய்வு நிறுவனமான டபிள்யுஎம்ஓ (WMO), உலகளவில், எல் நினோ வலுவடைவதற்கான வாய்ப்புள்ளதை உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் உலகின் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வரும் மாதங்களில் எல் நினோ நீடிப்பதற்கு 90 சதவிகிதம் அளவுக்கு வாய்ப்புகள் உள்ளதாகவே உலக வானிலை ஆய்வு மைய அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் வழக்கத்திற்கு மாறாக வெப்பமடையும் நீரால், தீவிர வானிலை நிகழ்வுகளின் அபாயத்தை அதிகரிக்கும்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவில், அறிவியல் தெளிவாகக் கூறுகிறது. வரும் மாதங்களில் எல் நினோ 90 சதவிகிதம் நம்மை வந்தடையப் போகிறது என்பது உறுதி. உலகம் இதை ஒரு அவசர காலநிலை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், எல் நினோ காலக்கட்டம் என்பது, ஏற்கனவே வெப்பமடைந்து வரும் உலகம் எனும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலாகும் என்று உலக வானிலை அமைப்பு மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் எச்சரித்துள்ளது.
எல் நினோ பொதுவாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. இது இந்தியா போன்ற நாடுகளில் சராசரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவு மற்றும் பருவமழையை பலவீனப்படுத்துவது போன்றவற்றை ஏற்படுத்தும்.
எனவே, 2026ஆம் ஆண்டு எல்நினோ உருவாக, ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் 80 சதவிகித வாய்ப்பு இருப்பதாகவும், இந்த அமைப்பு குறைந்தது நவம்பர் வரை நீடிப்பதற்கான சாத்தியக்கூறு 90 சதவிகிதம் இருப்பதாகவும், கணிக்கப்பட்டுள்ளது.
வலுவான எல் நினோ நிகழ்வுகளுக்கு மக்கள் தயாராக வேண்டும். இது கடும் வறட்சி மற்றும் கனமழையைக் கொடுத்து நிலைமையை மோசமாக்கும், நிலப்பகுதிகளிலும், கடல் பகுதிகளிலும் வெப்ப அலைகள் அதிகரித்து அபாயத்தை உருவாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜூன்-ஜூலை-ஆகஸ்ட் பருவத்தில், உலகின் ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளிலும் இயல்பை விட அதிகமான வெப்பநிலை நிலவும் என முன்னறிவிப்புகள் கூறுகின்றன. அத்துடன், மழைப்பொழிவு குறையும், இதனால் வறட்சி உருவாகும்.
எல் நினோ காரணமாக இந்தியாவில் பலவீனமான தென்மேற்குப் பருவமழைக்கு இருக்கும். இதை இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்துள்ளது. முக்கியமான ஜூன்-செப்டம்பர் தென்மேற்குப் பருவமழை முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் அது இந்தியாவின் ஆண்டு மழைப்பொழிவில் கிட்டத்தட்ட 70-75 சதவிகிதம் அளவுக்குக் கொண்டுள்ளது.
இது பாதிக்கப்படும்போது, ஒட்டுமொத்த விவசாயமும், அதன் காரணமாக பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்பதால், எல் நினோவின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.