கரப்பான்பூச்சி கட்சி சார்பில் போராட்டத்துக்கு அனுமதி கோரவில்லை! - தில்லி காவல்துறை
கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்த அனுமதி கோரவில்லை என்று தில்லி காவல்துறை தெரிவித்தது பற்றி...
கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்த அனுமதி கோரவில்லை என்று தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி ஒருவரின் விமர்சனத்தால் கோபமடைந்த இளைஞர்கள், அந்த வார்த்தையையே தங்களின் அடையாளமாக மாற்றி, கடந்த மே 16 ஆம் தேதி அபிஜித் திப்கே என்ற டிஜிட்டல் கிரியேட்டர் தலைமையில் 'கரப்பான்பூச்சி மக்கள் கட்சி' (சிஜேபி) என்ற நையாண்டி பக்கத்தை முகநூல் மற்றும் எக்ஸ் தளங்களில் தொடங்கினர். அண்மையில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே வரும் ஜூன் 6 ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து இந்தியா வருவதாகவும், தில்லியில் தர்மேந்திர பிரதான் ராஜிநாமாவைக் கோரி அமைதி வழியில் போராட்டம் நடத்த இருப்பதாகவும் பேசி விடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக தில்லி காவல்துறை, “இதுவரை, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியிடமிருந்து போராட்டத்துக்கு எந்த அனுமதியும் பெறவில்லை என்றும், அனுமதி கேட்கும் பட்சத்தில் அதைப் பரிசீலிப்போம் என்றும்” தெரிவித்தனர்.
மேலும், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் பதற்றமான பகுதிகளில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக காவல்துறையினர் தயாராக உள்ளனர் என்றும் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில், போராட்டத்துக்கு வருவதற்காக ஏற்கெனவே அமெரிக்காவிலிருந்து அபிஜித் திப்கே புறப்பட்ட்டுவிட்டார். அனுமதி பெறாமலேயே போராட்டம் குறித்த தகவல்கள் அடங்கிய போஸ்டர் ஒன்றை அந்தக் கட்சி தனது அதிகாரபூர்வ சமூக ஊடகதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The Delhi Police stated on Friday that no permission was sought to hold a protest on behalf of the 'Cockroach Janata Party'.