5,000-க்கும் மேற்பட்ட இந்திய சிம் கார்டுகளைப் பயன்படுத்தி இணையவழி மோசடி! அமலாக்கத்துறை விசாரணை
சைபர் மோசடி குற்றங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட 5,300 இந்திய சிம் கார்டுகள்...
புது தில்லி : 5,000-க்கும் மேற்பட்ட இந்திய சிம் கார்டுகளைப் பயன்படுத்தி இணையவழி மோசடிகள் நடைபெற்ற சைபர் குற்ற வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை தொடங்கியுள்ளது.
இந்தியாவில் வாங்கப்பட்ட மேற்குறிப்பிட்ட சிம் கார்டுகள் கம்போடியாவில் இருந்து செயல்படும் மலேசியாவைச் சேர்ந்தவொரு மோசடி கும்பலால் இந்தியாவில் பல்வேறு இணையவழி மோசடிக் குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாம். இந்தியாவிலுள்ள சில முகவர்கள் இந்திய சிம் கார்டுகளை கம்போடியாவில் இயங்கும் கும்பலுக்கு மலேசிய நாட்டவர் ஒருவர் மூலம் அனுப்பி வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்தக் கும்பல் இந்தியாவில் பல தரப்பு மக்களிடம் நூறுகளில் செலுத்தும் ரூபாய்க்கு கோடிகளில் பணம் திருப்பி வழங்குவதாக வாட்ஸ்ஆப் அழைப்பு மூலம் ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் ஒருபகுதியாக, ராஜஸ்தானில் 7 இடங்களிலும் பஞ்சாபிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், உள்ளூர் வங்கிகளில் 30 வங்கிக் கணக்குகள் தொடங்கி சைபர் மோசடிக்கு அந்தக் கும்பல் பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.
Advertisement
Advertisement
சைபர் மோசடி வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை ஆய்வுக்குட்படுத்திய 2.3 லட்சம் சிம் கார்டுகளில் ஏறத்தாழ 36,000 சிம் கார்டுகள் கம்போடியாவில் இருந்து செயல்பட்டதும் அவற்றில் 5,300 சிம் கார்டுகள் இந்தியாவெங்கிலும் இணையவழி மோசடிகளுக்காக வாட்ஸ்ஆப் அழைப்பு மூலம் பயன்படுத்தப்பட்டதும் அம்பலமாகியுள்ளது.