சென்னையில் போலி ஆவணம் மூலம் சிம் கார்டு வாங்க முயற்சி: கேரள கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது
சென்னையில் போலி ஆவணம் மூலம் சிம் கார்டு வாங்க முயற்சி செய்த கேரள கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது குறித்து...
சென்னை பிராட்வே எஸ்பிளனேடு பகுதியில் போலி ஆவணங்களை சமர்பித்து சிம் கார்டு வாங்கி மோசடியில் ஈடுபட்டு முயன்ற கேரள கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, பிராட்வே பகுதியில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் மேலாளராக உள்ள வெற்றிவேல்(34), கடந்த சில நாள்களாக அந்த நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் ஒரே நபர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து சிம் கார்டுகளை வாங்கி மோசடியில் ஈடுபட்டு வருவதை கண்டறிந்துள்ளார்.
இந்த நிலையில், புதன்கிழமை பிற்பகல் பூக்கடை பகுதியில் உள்ள செல்போன் நிறுவனத்தில் மேலாளர் வெற்றிவேல் பணியில் இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த ஒருவர், அவருடைய ஓட்டுநர் உரிமத்தை கொடுத்து, 2 சிம் கார்டுகள் வாங்கியுள்ளார், அப்போது மேலாளர் வெற்றிவேல் சந்தேகத்தின்பேரில், மேற்படி ஓட்டுநர் உரிமத்தை சரிபார்த்தபோது,
Advertisement
Advertisement
அது போலியாக தயாரிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் என்பதும், இதே நபர் ஏற்கெனவே பல முறை போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களை சமர்பித்து, சிம் கார்டு பெற்று மோசடி செய்திருப்பது உறுதியானது.
இதையடுத்து வெற்றிவேல், காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசால் அந்த நபரிடம் விசாரணை செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அந்த நபரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜி நகரைச் சேர்ந்த சஞ்சய் வர்மா(53) என்பதும், சிம் கார்டு வாங்குவதற்காக அவர் கொடுத்த ஓட்டுநர் உரிமம் கணினியில் போலியாக தயார் செய்யப்பட்டது என்பதும், மேலும் இவர் ஏற்கனவே போலி ஆவணங்கள் கொடுத்து, திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சிம் கார்டுகள் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மேலாளர் வெற்றிவேல் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் வர்மா(53) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 சிம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் விசாரணையில், கைது செய்யப்பட்ட சஞ்சய்வர்மா மீது கேரளம் மாநிலத்தின் தம்பானூர், தலச்சேரி, எர்ணாகுளம் ஆகிய காவல் நிலையங்களில் கள்ளநோட்டு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
அதேபோன்று, சென்னை புனித தோமையர் மலை காவல் நிலைய திருட்டு வழக்கு மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, காவல் நிலைய மோசடி ஆகிய இரு வழக்குகளில் தலைமறைவாக இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சஞ்சய் வர்மா விசாரணைக்குப் பின்னர், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Attempt to obtain SIM card using forged documents in Chennai: Member of Kerala counterfeit currency gang arrested
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.