எம்.எல்.ஏ., எம்.பி.யை வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது! காங்கிரஸ்
இந்தியா கூட்டணி ஆலோசனைக்குப் பிறகு கே.சி. வேணுகோபால் பேசியது குறித்து...
பாஜகவால் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை வாங்கலாம், ஆனால் மக்களை ஒருபோதும் வாங்க முடியாது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று (ஜூன் 8) தெரிவித்தார்.
தில்லி அரசியலமைப்பு மன்றத்தில் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 8) நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 25 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
பாஜக அரசால் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள், பொருளாதாரச் சூழல், வேலையின்மை, விலைவாசி உயர்வு, விவசாயிகளின் பிரச்னைகள் மற்றும் மக்கள் சார்ந்த பிற விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுடன் கே.சி. வேணுகோபால் பேசியதாவது:
''இந்தியா கூட்டணி கூட்டத்தில் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றன. அதனால்தான் அனைவரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர். அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும்.
மக்களின் துயரமே எங்கள் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் நீட், சிபிஎஸ்இ தேர்வு வினாத்தாள் கசிவு ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இவை மக்களின் பிரச்னைகள். இப்பிரச்னைகளில் எங்களுக்குள் ஒருமித்த கருத்து நிலவுகிறது. நாங்கள் இதற்காகத் தொடர்ந்து போராடுவோம்.
அவர்களால் (பாஜக) சில எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை வாங்க முடியும். ஆனால் அவர்களால் நாட்டு மக்களை விலைக்கு வாங்க முடியாது. அதனை நாம் அனைவரும் கண்டுள்ளோம்'' எனக் குறிப்பிட்டார்.
தில்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முஃப்தி, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுப்ரியா சூலே, சிவசேனை சார்பில் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் அகட்சியின் தலைவரும் முதல்வருமான ஹேமந்த் சோரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி. ராஜா, மார்க்சிஸ் கம்யூனிஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் எம்.பி., ஜான் பிரிட்டாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.