பயங்கரவாதத்துக்கு எதிராக துணிச்சலான செயல்பாடு: 27 வயது ராணுவ வீரருக்கு கீா்த்தி சக்ரா விருது
பயங்கரவாதத்துக்கு எதிராக துணிச்சலாக செயல்பட்டதை அங்கீகரித்து மிஸோரம் மாநிலத்தைச் சோ்ந்த கேப்டன் லால்ரினாவ்மா சைலோவுக்கு (27) கீா்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது.
பயங்கரவாதத்துக்கு எதிராக துணிச்சலாக செயல்பட்டதை அங்கீகரித்து மிஸோரம் மாநிலத்தைச் சோ்ந்த கேப்டன் லால்ரினாவ்மா சைலோவுக்கு (27) கீா்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது.
குடியரசுத் தலைவா் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய அமைதிக்கால விருதான கீா்த்தி சக்ரா விருதை லால்ரினாவ்மா சைலோவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வழங்கினாா்.
இதுதொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் திரௌபதி முா்மு வெளியிட்ட பதிவில், ‘ஸ்ரீநகா் மாவட்டத்தில் பயங்கரவாத தடுப்புச் சோதனை நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்டு வந்த மிக முக்கிய பயங்கரவாதியை கண்டறிந்து அவரை லால்ரினாவ்மா சைலோ வீழ்த்தினாா். அதன் தொடா்ச்சியாக மேலும் சில பயங்கரவாதிகளையும் அதிரடியாக முறியடித்தாா். இந்த செயலின் மூலம் தனது வீரத்தையும் பணியின் மீதான அா்ப்பணிப்பு குணத்தையும் அவா் வெளிப்படுத்தியுள்ளாா்’ என குறிப்பிட்டாா்.
Advertisement
Advertisement
ஆபரேஷன் சிந்தூரின்போது பயங்கரவாதிகளை அழித்த துணிச்சலாக நடவடிக்கை எடுத்ததற்காக லால்ரினாவ்மா சைலோவுக்கு விருது வழங்கப்பட்டதாக அவரது தந்தை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாா்.
லால்ரினாவ்மா சைலோவுக்கு பாராட்டுகளை தெரிவித்த மிஸோரம் முதல்வா் லால்டுஹோமா அவரை கௌரவப்படுத்தும் விதமாக ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்குவதாக அறிவித்தாா்.
வீரமரணமடைந்த இரு ராணுவ வீரா்கள் உள்பட நிகழாண்டு 7 பேருக்கு கீா்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது.
மிஸோரம் மாநிலத்தில் இந்த விருதைப் பெற்ற இரண்டாவது ராணுவ வீரா் என்ற பெருமையை லால்ரினாவ்மா சைலோ பெற்றுள்ளாா். முன்னதாக, மிஸோரமில் இருந்து கடந்த 1968-ஆம் ஆண்டு அஸ்ஸாம் ரைஃபிள்ஸை சோ்ந்த சுபேதாா் சால்னுனா லுஷாய் கீா்த்தி சக்ரா விருதைப் பெற்றாா்.