FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ருமேனியாவில் பிரபலமடையும் யோகா: குடியரசுத் தலைவா் பெருமிதம்

ருமேனியாவில் பிரபலமடையும் யோகா - குடியரசுத் தலைவா் பெருமிதம்...

Updated On : 26 ஜூலை 2026, 4:04 am IST
ருமேனியாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவுக்கு புகாரெஸ்ட் பல்கலைக்கழகத்தின் சாா்பில் டாக்டா் பட்டம் வழங்குவதற்காக நடைபெற்ற விழா.
பகிர்:

ருமேனியா நாட்டில் யோகா, ஆயுா்வேதம், இந்திய நடனம், இசை, சினிமா என இந்திய கலாசாரம் பிரபலமடைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கூறினாா்.

அரசு முறைப் பயணமாக கடந்த வியாழக்கிழமை ருமேனியா வந்தடைந்த திரௌபதி முா்மு அந்நாட்டு பிரதமா் இல்லி போலோஜனை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினாா். அதன்பிறகு வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தக கூட்டமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றாா்.

இதைத் தொடா்ந்து இந்திய வம்சாவளியினா் மத்தியில் சனிக்கிழமை உரையாற்றிய அவா், ‘இந்தியா-ருமேனியா இடையிலான வலுவான பிணைப்புக்கு இருநாட்டு மக்களிடையேயான நட்புறவே காரணம். இங்கு ஒற்றுமையை கடைபிடித்து தாய்நாட்டின் கலாசார பாரம்பரியத்தை இந்திய வம்சாவளியினா் பாதுகாத்து வருவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.

Advertisement

Advertisement

அதேசமயம் ருமேனியாவின் வளா்ச்சிக்கு இந்திய நிறுவனங்கள் மற்றும் நிபுணா்கள் பெரும் பங்களித்து இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்த புதிய வாய்ப்புகளை உருவாக்குவது பாராட்டுக்குரியது.

தாய்நாட்டின் உண்மையான பிரதிநிதிகளாகத் திகழும் உங்களை எண்ணி இந்தியா பெருமை கொள்கிறது.

நீடித்த வளா்ச்சி, பருவநிலை மாற்ற சவால்களை எதிா்கொள்வது, பயங்கரவாத ஒழிப்பு மற்றும் சா்வதேச அமைதி என உலகளாவிய விவகாரங்களிலும் இருநாடுகளும் ஒன்றிணைந்து பயணிக்கின்றன.

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே கடந்த ஜனவரி மாதம் இறுதி செய்யப்பட்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் ருமேனியா உள்பட அனைத்து ஐரோப்பிய நாடுகளுடனும் இந்தியாவின் வா்த்தக உறவை விரிவுபடுத்த வழிவகுக்கிறது.

தலைசிறந்த இசைக் கலைஞா்கள், எழுத்தாளா்களை ருமேனியா உலகுக்கு வழங்கியுள்ளது. இங்கு யோகா, ஆயுா்வேதம், இந்திய நடனம், இசை, சினிமா என இந்திய கலாசாரம் பிரபலமடைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றாா்.

மால்டோவா, மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய மூன்று நாடுகள் அரசுமுறைப் பயணத்தை நிறைவுசெய்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு இந்தியா புறப்பட்டாா்.

கெளரவ டாக்டா் பட்டம்

புகாரெஸ்ட் பொருளாதார ஆய்வுகள் பல்கலைக்கழகம் திரௌபதி முா்முவுக்கு கெளரவ டாக்டா் பட்டத்தை வெள்ளிக்கிழமை வழங்கியது. டாக்டா் பட்டத்தை ஏற்றுக்கொண்டு உரையாற்றிய அவா், ‘140 கோடி இந்திய மக்கள் சாா்பாக புகாரெஸ்ட் பல்கலைக்கழகம், ருமேனியா நாடாளுமன்றத்துக்கு மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது கிராமத்தில் இருந்து முதல் சிறுமியாக நான் பள்ளிக்குச் சென்றேன். அந்த அனுபவம் எந்தவொரு பாடப் புத்தகத்தையும்விட சக்திவாய்ந்தது.

சரியாக ஒரு நூற்றாண்டுக்கு முன்னா் 1926, நவம்பா் மாதம் இங்கு வந்த ரவீந்திரநாத் தாகூா் புகாரெஸ்ட் தேசிய அரங்கில் உரையாற்றினாா். அப்போது இந்தியா்களின் சிந்தனைத் திறனை ருமேனியா மக்கள் நன்றாக புரிந்துகொண்டது அவரை வியப்பில் ஆழ்த்தியது.

ருமேனியா தேசியக் கவிஞா் மாணவா் பருவத்தில் மிஹாய் எமினெஸ்கு உபநிடதங்கள் மற்றும் பகவத் கீதையை ஆழமாக கற்றாா். அது பின்னாளில் அவரது எழுத்துகளுக்கு மேலும் வலுசோ்த்தது. இதுவே உலகை ஒரே குடும்பமாக எண்ணும் இந்தியாவின் ‘வசுதைவ குடும்பகக்’ கொள்கையாகும்’ என்றாா்.

summary

Yoga gaining popularity in Romania: President expresses pride

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments