வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து மீனாட்சி நடராஜனின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!
வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது பற்றி...
மத்தியப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தலில் வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை (ஜூன் 11) தள்ளுபடி செய்யப்பட்டது.
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற இருந்த மாநிலங்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், மீனாட்சி நடராஜன் தனது வேட்புமனுவில் அவர் மீது நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டதைக் குறிப்பிடவில்லை என்று பாஜக வேட்பாளர் மகேஷ் கேவத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக விசாரித்த தேர்தல் ஆணையம் மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை நிராகரித்தது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தன்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார் மீனாட்சி நடராஜன்.
Advertisement
Advertisement
இதையடுத்து, வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாளான நேற்று களத்தில் பாஜக வேட்பாளர்கள் மூன்று பேர் மட்டுமே இருந்ததால், அவர்கள் மூவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில், மீனாட்சி நடராஜனின் மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.