அபிஷேக் பானர்ஜி வீட்டின் பூட்டை உடைத்து காவல்துறையினர் சோதனை?
மேற்கு வங்கத்தில் அபிஷேக் பானர்ஜி வீட்டில் 4 மணி நேரத்துக்கும் மேலாக காவல் துறையினர் சோதனை நடத்தியது பற்றி...
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தேசிய பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி வீட்டில் 4 மணி நேரத்துக்கும் மேலாக காவல் துறையினர், சனிக்கிழமை (ஜூன் 13) சோதனை நடத்தினர்.
சட்டப்பேரவை திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவர் (எதிர்க்கட்சித் தலைவர்), துணைத் தலைவர், தலைமை கொறடா நியமனத்தில் மமதா பானர்ஜி முடிவுக்கு எதிராக கட்சியில் குரலெழுப்பப்பட்டது. இதனால் கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்தன.
இதையடுத்து, திரிணமூல் காங்கிரஸ் சார்பில் பேரவைத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு முன்மொழிவில் எம்எல்ஏக்களின் கையொப்பங்கள் போலியாகப் பயன்படுத்தப்பட்டதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலர் குற்றம் சாட்டினர். இந்தக் குற்றச்சாட்டு குறித்து வழக்குப் பதிவு செய்த சிஐடி அதிகாரிகள் அபிஷேக் பானர்ஜியிடம் கடந்த ஜூன் 11 ஆம் தேதி 5 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தினர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, மேற்கு மெதினிபூரின் சல்போனி காவல் நிலையத்தில் அபிஷேக் பானர்ஜி மீது தொடுக்கப்பட்ட மற்றொரு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அதிகாலை 3 மணிக்கு மேல் தொடங்கிய இந்த சோதனை சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்ததாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில், அபிஷேக் பானர்ஜியின் வீட்டுக்குள் நுழைவதற்காக காவல் துறையினர் வீட்டின் பூட்டை உடைத்ததாக திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் குற்றம் சாட்டினர்.
இருப்பினும், அபிஷேக் பானர்ஜி வீட்டில் ஏதேனும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதா அல்லது வழக்கு சம்பந்தமான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டதா என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.