தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! 90 கி.மீ. வேகத்தில் காற்று! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!
தில்லியை புழுதிப் புயல் தாக்கியதை அடுத்து, சிவப்பு எச்சரிக்கை விடுத்திருப்பது பற்றி...
தில்லியில் திடீர் வானிலை மாற்றம் ஏற்பட்டு இன்று பிற்பகல் புழுதிப் புயல் தாக்கிய நிலையில், பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தில்லியில் சமீப காலமாக திடீர் வானிலை மாற்றம் ஏற்பட்டு, பலத்த காற்றுடன் மழை பெய்து வருகின்றது. வானிலை ஆய்வு மையத்தின் முன் கணிப்புக்கு மாறாக நிகழ்ந்து வரும் மாற்றத்தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், தில்லியின் பல்வேறு பகுதியில் இன்று பிற்பகல் வானிலை மாற்றம் ஏற்பட்டு, புழுதிப் புயல் தாக்கியது. இதனால் சாலைகள் கண்ணுக்கு தெரியாத வகையில் புழுதி மூட்டம் படர்ந்தது.
Advertisement
Advertisement
தில்லி மட்டுமின்றி, ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் இன்று புழுதிப் புயல் தாக்கியது. பாலம் பகுதியில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் காற்றின் வேகம் 92 கி.மீ. ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், தில்லியின் பல்வேறு பகுதிகளில் 70 - 90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்றும் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மரங்கள், மின் கம்பங்கள், பலவீனமான கட்டடங்கள் ஆகிய பகுதியைவிட்டு விலகி இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இமயமலைப் பகுதியை பாதித்து வரும் 'மேற்குத் திசை இடையூறு' (western disturbance) எனப்படும் வானிலை மாற்றமே இதற்கு காரணம் என்று வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாதிப்பானது செவ்வாய்க்கிழமை முதல் படிப்படியாக குறைந்து வெப்பநிலை உயரக் கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
Dust storm hits Delhi - Winds at 90 km/h - Red alert issued
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.