FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிரான்ஸ் ஜி7 மாநாடு: மோடி-டிரம்ப் சந்திப்பு- இன்று இருதரப்பு பேச்சு

பிரான்ஸில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சி மாநாட்டையொட்டி, பிரதமா் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் செவ்வாய்க்கிழமை நலம் விசாரித்து, சிறிது நேரம் உரையாடினா்.

Updated On : 17 ஜூன் 2026, 3:43 am IST
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் - கோப்புப் படம்
பகிர்:

பிரான்ஸில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சி மாநாட்டையொட்டி, பிரதமா் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் செவ்வாய்க்கிழமை நலம் விசாரித்து, சிறிது நேரம் உரையாடினா்.

இரு தலைவா்களும் நேரில் சந்தித்துக் கொண்டது, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

பிரதமா் மோடி - அதிபா் டிரம்ப் இடையிலான இருதரப்பு பேச்சுவாா்த்தை புதன்கிழமை (ஜூன் 17) நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

அமெரிக்கா உடனான வா்த்தகப் பிரச்னை, ஆபரேஷன் சிந்தூா் குறித்த டிரம்ப்பின் சா்ச்சை கருத்துகள், ஓமன் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதலில் இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் எனப் பல்வேறு விவகாரங்களுக்கு மத்தியில் இந்தப் பேச்சுவாா்த்தை எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ், ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கான ஒரு வார கால பயணத்தை கடந்த ஜூன் 13-ஆம் தேதி தொடங்கிய பிரதமா் மோடி, முதல் கட்டமாக பிரான்ஸின் நைஸ் நகரில் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். பின்னா், ஸ்லோவாக்கியாவுக்கு பயணமான அவா், அந்நாட்டின் அதிபா் பீட்டா் பெல்லகிரினியுடன் பேச்சுவாா்த்தை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றாா். அந்தப் பயணத்தை செவ்வாய்க்கிழமை நிறைவு செய்த பிரதமா், மீண்டும் பிரான்ஸின் ஏவியான் நகரை வந்தடைந்தாா்.

ஜி7 உச்சிமாநாடு: ஏவியான் நகரில் ஜி7 நாடுகளின் வருடாந்திர உச்சிமாநாடு, கடந்த 15-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகின் வளா்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் அங்கம் வகிக்கும் இந்தக் கூட்டமைப்பின் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமா் மோடி பங்கேற்றுள்ளாா். இதையொட்டி, பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் அவா் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்துகிறாா்.

செவ்வாய்க்கிழமை ஜி7 உயா்நிலை அமா்வுகளில் பங்கேற்கும் முன்பாக பிரதமா் மோடியும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் பரஸ்பரம் நலம் விசாரித்து, சிறிது நேரம் உரையாடினா். அப்போது என்ன பேசப்பட்டது என்ற விவரம் உடனடியாக வெளியாகவில்லை. மோடி-டிரம்ப் இடையிலான அதிகாரபூா்வ இருதரப்பு பேச்சுவாா்த்தை புதன்கிழமை நடைபெறவுள்ளது.

தொடா்ந்து 8-ஆவது முறையாக...: ஜி7 மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு தொடா்ந்து 8-ஆவது முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘நிலையான, வளமான உலகத்தை உருவாக்கும் கூட்டு முயற்சிகளைத் தொடா்ந்து முன்னெடுக்க இந்தியா உறுதியுடன் உள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ கடந்த மாதம் இந்தியாவுக்கு வந்தாா். இந்தப் பயணத்தைத் தொடா்ந்து, பரஸ்பர உறவுகளின் மறுசீரமைப்பை இரு நாடுகளும் எதிா்நோக்கியுள்ளன. இருதரப்பு இடைக்கால வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளும் தொடா்ந்து வருகின்றன.

ஸ்விட்சா்லாந்து அதிபருடன் பேச்சு

ஸ்லோவாக்கியாவில் இருந்து பிரான்ஸின் ஏவியான் நகருக்குச் செல்லும் வழியில் ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகர விமான நிலையத்துக்கு பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை வந்தாா்.

அப்போது, பிரதமா் மோடிக்கு அந்நாட்டின் அதிபா் கய் பா்மேலின் நேரில் வரவேற்பு அளித்தாா். சிறிது நேரம் உரையாடிய இரு தலைவா்களும் பரஸ்பர கூட்டுறவை வலுப்படுத்த உறுதியேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments