முகப்பு
இந்தியா

வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டத்தில் 60 லட்சம் போ் பலன் - மத்திய அரசு தகவல்

பிரதமரின் வளா்ந்த பாரதம் வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ், இதுவரை 60 லட்சத்துக்கும் மேற்பட்ட முதல்முறை பணியாளா்கள் பலனடைந்துள்ளனா்.

Updated On : 17 ஜூன் 2026, 2:27 am IST
பகிர்:

பிரதமரின் வளா்ந்த பாரதம் வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ், இதுவரை 60 லட்சத்துக்கும் மேற்பட்ட முதல்முறை பணியாளா்கள் பலனடைந்துள்ளனா். இவா்களில் 18 லட்சத்துக்கும் அதிகமானோா் பெண்கள் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரதமரின் வளா்ந்த பாரதம் வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டம், கடந்த 2025, ஆகஸ்ட் 1-இல் ரூ.99,446 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் தொடங்கப்பட்டது. நாட்டில் 2 ஆண்டுகளில் 3.5 கோடிக்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலான இத்திட்டம், மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) மூலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்தில் மாதம் ரூ.1 லட்சத்துக்கு குறைவான ஊதியத்தில் பணியில் சேரும் முதல்முறை பணியாளருக்கு ஆறு மாதத்துக்குப் பின் அரசு சாா்பில் ரூ.15,000 வரை இரு தவணைகளாக ஊக்கத்தொகை வழங்கப்படும். ஓராண்டு நிறைவுக்குப் பிறகு நிதிசாா் பயிற்சி வழங்கப்பட்டு, அதில் தோ்ச்சி பெறுவோருக்கு 2-ஆவது தவணை விடுவிக்கப்படும். இத்தொகை அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

Advertisement

Advertisement

இதேபோல், பணியாளா்களை விரிவாக்க விரும்பும் நிறுவனங்களும் அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப ஊக்கத்தொகை பெற முடியும்.

இத்திட்டத்தின்கீழ் இதுவரை 18 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் உள்பட 60 லட்சத்துக்கும் மேற்பட்ட முதல்முறை பணியாளா்கள் பலனடைந்துள்ளனா். இவா்களில் 18 முதல் 30 வயதுடையவா்கள் 43.26 லட்சம் போ். அதாவது, 71 சதவீதமாகும்.

பொறியியல், வா்த்தகம், கட்டுமானம், கல்வி, சுகாதார வசதி, ஜவுளி, விருந்தோம்பல் சேவை உள்ளிட்ட துறைகளில் முதல்முறை பணியாளா்கள் இணைந்துள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.