பெங்களூருவில் துப்பாக்கி முனையில் தொழிலதிபரிடம் ரூ. 1.09 கோடி கொள்ளை; விசாரணை தீவிரம்
பெங்களூருவில் துப்பாக்கி முனையில் தொழிலதிபரிடம் ரூ. 1.09 கோடி கொள்ளையடித்த சம்பவம் குறித்து...
பெங்களூரு: கர்நாடகம் மாநிலம், பெங்களூரு தசனாபுரா ஹோப்ளியில் உள்ள குதுரேகெரே காலனி அருகே, அடையாளம் தெரியாத ஏழு பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் தொழிலதிபர் ஒருவரிடமிருந்து ரூ.1.09 கோடியைக் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு தம்மெனஹள்ளி முனிசாமி ரெட்டி லேஅவுட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் ஆர்.ஐ. சிவசங்கர் (41), நண்பர்களுடன் ஸ்கூட்டர் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், ஆந்திரம் மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த வணிகத் தொடர்புகள் கொண்ட நபர்கள் 'ஏஎன்ஆர்எஸ்' (அமெரிக்கன் நியூக்ளியர் ரிசர்ச் சிஸ்டம்) என்ற நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு சிவசங்கரை வலியுறுத்தியுள்ளனர்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக சிவசங்கரிடம் பேசுவதற்காக ஜூன் 12 ஆம் தேதி, பெங்களூரு கொடிகேஹள்ளியில் உள்ள ஒரு ஹோட்டலில் முகமது பர்வேஸ், அல்லிஸ் மற்றும் ஜான்சன் ஆகிய மூன்று பேர் தங்கியுள்ளனர். பின்னர் இவர்கள் மூவரும் ஜூன் 13 ஆம் தேதி சிவசங்கரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவரிடமிருந்து ரூ. 35 லட்சத்தையும் பெற்றுள்ளனர். மீண்டும் ஜூன் 15 ஆம் தேதி தங்களுக்கு சேர வேண்டிய ரூ. 74 லட்சம் குறித்து பேசியதுடன், யலஹங்காவில் உள்ள 'ஃப்ரெஷ் ரெசிடென்சி' அருகே சந்திக்குமாறு அழைத்துள்ளனர்.
இதையடுத்து சிவ சங்கர் தனது ஓட்டுநருடன் ஹோண்டா அமேஸ் காரில் அங்கு சென்றுள்ளார். காரை நெலமங்கலத்திற்குக் கொண்டு வருமாறு கூறியுள்ளனர். அன்று இரவு சுமார் 11 மணியளவில், குதுரேகெரே காலனியில் உள்ள கணேஷ் கோயில் அருகே, ஒரு எஸ்.யு.வி வாகனம் அவர்களின் காரின் வந்து வழிமறித்து நின்றது. பின்னர் அதிலிருந்து இறங்கி நான்கு பேர், துப்பாக்கி முனையில் சிவசங்கரையும் அவரது ஓட்டுநரையும் தங்கள் வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றியுள்ளனனர்.
காரின் டிக்கியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 74 லட்சத்தை அந்தக் கும்பல் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், மூவர் ஓட்டுநருடன் சிவசங்கரின் வீட்டிற்குச் சென்று, அவரது மனைவியிடமிருந்து மேலும் ரூ. 35 லட்சத்தைப் பெற்றுக்கொண்டர். சிவசங்கரின் செல்போன் மற்றும் காரையும் எடுத்துச் சென்றனர். பின்னர் அவர்களை நெலமங்கலம் அருகே இறக்கிவிட்டுள்ளனர்.
மேலும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சிவசங்கரை மிரட்டியுள்ளனர். . ஓட்டுநரும், சிவசங்கரும் எப்படியோ வீடு திரும்பியுள்ளனர். இதனால் பயந்து போன சிவசங்கர் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்த பின்னர், ஜூன் 16 மாலை 7.30 மணிக்கு மடனாயக்கனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து கடத்தல் மற்றும் ரூ.1.09 கோடி ரொக்கம் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, இரண்டு பிரிவுகளின்கீழ் மடனாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத ஏழு பேர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கி முனையில் தொழிலதிபர் ஒருவரிடமிருந்து ரூ.1.09 கோடி கொள்ளையக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.