பாதுகாப்புப் படை துப்பாக்கிச் சூடு: நக்ஸல் அமைப்பின் முக்கிய தலைவர் கைது!
ஜார்க்கண்டில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நக்ஸல் அமைப்பின் முக்கியத் தலைவர் கைது செய்யப்பட்டார்.
ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் உள்ள திம்லி வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பி.எல்.எஃப்.ஐ. என்கிற (இந்திய மக்கள் விடுதலை முன்னணி) என்கிற நக்ஸல் இயக்கத்துக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
அதில், அந்த இயக்கத்தின் முக்கிய தலைமை கமாண்டரான ஷ்ரவன் தாஸ் காயங்களுடன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ஷ்ரவன் தாஸுக்கு போலீஸ் காவலில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
Advertisement
Advertisement
நக்ஸல் அமைப்பின் தளபதியாக செயல்பட்டு வந்த ஷ்ரவன் தாஸ், குந்தி வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அவர்கள் தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
தேடுதல் வேட்டையின் போது பாதுகாப்புப் படையினர் மீது நக்ஸல்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக அவர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், அந்த இயக்கத்தின் தளபதியாகச் செயல்பட்டு வந்த ஷ்ரவன் தாஸ் காயமடைந்தார். அவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவருடன் சேர்த்து மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நக்ஸல்களிடமிருந்து 4 கைத்துப்பாக்கிகள், நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் போன்றவை கைப்பற்றப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் ரிஷப் கார்க் தெரிவித்தார்.
மேலும், ஷ்ரவன் தாஸிடமிருந்து ஒரு டைரி கைப்பற்றப்பட்டதாகக் கூறிய அவர், அதில் அவர்கள் நடத்தவிருந்தத் தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்ததாகவும், இதன்மூலம் அவர்களின் சதித் திட்டங்கள் முறியடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
டோர்பா மற்றும் கர்ரா பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஷ்ரவன் தாஸ் முக்கிய பங்கு வகித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில்வே கட்டுமானத் தளத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியது, தீவைப்பு மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற பல குற்றச்சாட்டுகள் இவர் மீது உள்ளன. அதேபோல, அவர்மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குகளும் உள்ளன.
தற்போது, ஷ்ரவன் தாஸ் மற்றும் அவரது இயக்கத்தினருடன் தொடர்புடைய நபர்களைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Security forces' firing: Key Naxal leader arrested
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.