முகப்பு
இந்தியா

100 டாலரைத் தாண்டிய கச்சா எண்ணெய் விலை! இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

கச்சா எண்ணெய் விலை உயர்வு பற்றி...

Updated On : 9 மார்ச், 2026 at 12:32 PM
கோப்புப் படம் - ANI
பகிர்:

கச்சா எண்ணெய் விலை இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 21% உயர்ந்துள்ளது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதையடுத்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முக்கிய கடல் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தி நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி தடை பட்டுள்ளது.

ஈரானின் ஹோர்முஸ் ஜலசந்தி நீரிணை மூடப்பட்டுள்ளதால் அந்த வழியாக மேற்கொள்ளப்படும் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் போன்ற எண்ணெய் உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகள், உற்பத்தியைக் குறைத்துள்ளன.

Advertisement

இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிரடியாக இன்று உயர்ந்துள்ளது. ஈரானின் எண்ணெய் கிடங்குகள் மீதும் அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப்படைகள் கடுமையாக தாக்குதலை நடத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக இன்று காலை நிலவரப்படி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 21 சதவீதம் உயர்ந்து 115 டாலராக உள்ளது. 2022க்குப் பிறகு இது அதிகமான விலை உயர்வாகும். கடந்த வெள்ளிக்கிழமை கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 92.69 டாலராக இருந்தது.

இன்று 100 டாலருக்கும் மேலாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது இன்று பங்குச்சந்தையிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் நீடிக்கும் பட்சத்தில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து 150 டாலர் வரை அதிகரிக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

ஏற்கெனவே இந்தியாவில் வணிக மற்றும் வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 60, வணிக சிலிண்டர் விலை ரூ. 115 உயர்ந்துள்ளது.

போர் சூழல் நீடிப்பதால் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சமையல் எரிவாயு (எல்பிஜி) உற்பத்தியை அதிகரிக்குமாறு மத்திய அரசு அவசரகால உத்தரவை பிறப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் வரும் நாள்களில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எரிசக்தி துறையில் இந்தியாவில் பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல இந்தியாவில் ரூபாயின் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பணவீக்கம் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 92.33 ஆகக் குறைந்துள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரையில் 60%க்கும் அதிகமான கச்சா எண்ணெய், வளைகுடா நாடுகளில் இருந்துதான் பெறப்படுகிறது. கிட்டத்தட்ட 90% கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி செய்கிறது. உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி நாடாக இந்தியா உள்ளது. தற்போது கச்சா எண்ணெய் இறக்குமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியாவுக்கு அமெரிக்கா 30 நாள்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக ரஷியா - உக்ரைன் போரினால் உக்ரைனுக்கு ஆதரவாக, ரஷியாவிடம் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா கூறியிருந்ததது குறிப்பிடத்தக்கது. தற்போது உலக அளவில் குறிப்பாக இந்தியாவுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்தியாவுக்கு மட்டும் அமெரிக்கா இந்த சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், கச்சா எண்ணெய் விலை உயர்வு குறித்து, அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் உலக அமைதிக்கு 'சிறிய விலை கொடுப்பதில் தவறில்லை' என்று கூறியுள்ளார்.

ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் முடிவுக்கு வந்தால் மட்டுமே எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகம் சீராகும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

எனினும் இந்தியாவுக்கு பெரிதாக தட்டுப்பாடு எதுவும் இருக்காது என்று மத்திய அரசு கூறி வருகிறது. போரின் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

summary

Crude Oil Crosses 100 dollar A Barrel Amid Israel- Iran War

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.