எரிபொருள் விநியோகம் சீராகிறது! பதுக்கப்பட்ட 15,000 சிலிண்டர்கள் பறிமுதல்! - மத்திய அரசு
சிலிண்டர் விநியோகம் சீராகி வருவதாக மத்திய அரசு தெரிவித்திருப்பது பற்றி...
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் சீராகி வருவதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்துள்ளது.
மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து எரிபொருள் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சிலிண்டர், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் பதுக்குவதை தடுக்கும் வகையில், அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தை (எஸ்மா) மத்திய அரசு அமல்படுத்தியது.
தற்போது ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்திய கொடியேந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்ததை தொடர்ந்து, இரண்டு எரிவாயு டேங்கர் கப்பல்கள் இந்திய துறைமுகம் வந்தடைந்துள்ளது.
இந்த நிலையில், மத்திய வெளியுறவு, பெட்ரோலியம் மற்றும் எரிபொருள், கடல் போக்குவரத்து உள்ளிட்ட அமைச்சகத்தின் அதிகாரிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து இன்று விளக்கம் அளித்தனர்.
அவர்கள் தெரிவித்ததாவது:
”பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவு நம்மிடம் கையிருப்பில் உள்ளன. கடந்த சில நாள்களில் மட்டும் சிலிண்டரை பதுக்கி வைப்பவர்களை கண்காணிக்க 12,000 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில், 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தில்லியில் நேற்று மட்டும் 600 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசம், கேரளம், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வளைகுடா நாடுகளில் உள்ள நமது மலுமிகளும் கப்பல்களும் பாதுகாப்பாக இருக்கின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தூதரக உதவியுடன் 161 மலுமிகள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இரண்டாவது எல்பிஜி டேங்கர் கப்பல் நந்தா தேவி இன்று அதிகாலை காண்ட்லா துறைமுகம் வந்தடைந்தது. தற்போது, ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய இரண்டு எல்பிஜி கப்பல்களிலிருந்தும் சரக்குகள் இறக்கப்பட்டு வருகின்றன.
ஓமன் சோஹாரில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த இரண்டு இந்தியர்களின் உடல்களும் ஜெய்ப்பூரில் உள்ள அவர்களது குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டன. காயமடைந்த இந்தியர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. உயிருக்கு ஆபத்தான வகையில் எவ்வித காயமும் அவர்களுக்கு ஏற்படவில்லை.
ஈராக்கின் பஸ்ரா கடற்கரைப் பகுதியில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவரின் உடலை தாயகம் கொண்டுவரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காணாமல் போனவரின் உடல் தேடப்பட்டு வருகின்றது. மேலும், அந்த கப்பலில் இருந்த 15 இந்தியர்கள் மீட்கப்பட்டு, பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.” எனத் தெரிவித்தனர்.