மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜி கர் மருத்துவமனை: லிஃப்ட்டில் சிக்கி ஒருவர் பலி
கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவமனையில் லிஃப்ட்டில் சிக்கி ஒருவர் பலி
மேற்கு வங்கத்தில் ஆர்ஜி கர் மருத்துவமனையில் லிஃப்ட்டில் சிக்கி ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் இருந்த லிஃப்ட் திடீரென செயலிழந்து, தரைத் தளத்தில் மோதியதில் லிஃப்ட்டினுள் இருந்தவர் பலியானார்.
கொல்கத்தாவில் அருப் பானர்ஜி (41) என்பவர், ஆர்ஜி கர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது மகனைப் பார்ப்பதற்காக லிஃப்ட்டை பயன்படுத்தியுள்ளார். இந்த நிலையில்தான், லிஃப்ட் திடீரென பழுதடைந்து, கீழே விழுந்தது. சுமார் ஒரு மணிநேரப் போராட்டத்துக்குப் பின்னரே உயிரிழந்த நிலையில் அருப் பானர்ஜி சடலமாக மீட்கப்பட்டார்.
Advertisement
இதனைத் தொடர்ந்து, மாநில அரசின் அலட்சியமே அருப் பானர்ஜியின் உயிரிழப்புக்குக் காரணம் என்று எதிர்க்கட்சியினரான பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக லிஃப்ட் ஆபரேட்டர், பராமரிப்பாளர், பாதுகாவலர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக, 2024 ஆம் ஆண்டில் இதே மருத்துவமனையில்தான் முதுகலை மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தால், மருத்துவர்களும் நாடுதழுவிய போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், மீண்டுமொரு சர்ச்சையில் ஆர்ஜி கர் மருத்துவமனை சிக்கியுள்ளது.