ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழப்பு!
ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!
ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலப்படமான பாலைக் குடித்ததால் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 16 பேர் உயிரிழந்ததாக அம்மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி கே. வெங்கடேஷ்வர ராவ் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 22) தெரிவித்தார். மேலும், மூவர் ராஜமகேந்திரவரம் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜமகேந்திரவரத்தில் வீடுகளுக்கே வந்து பால் விநியோகிக்கும் ஒரே வியாபாரியிடம்தான் பால் வாங்கி அருந்திய குடும்பங்களில் பலருக்கும் கடந்த பிப். 22-இல் உடல்நிலை மிகவும் மோசமாகி அப்பகுதியிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
அந்த வியாபாரி உள்ளூா் கால்நடை விவசாயிகளிடமிருந்தும் பால் கொள்முதல் செய்து வீடுகளுக்கு விநியோகித்து வந்துள்ளாா் என்பதும், கலப்பட பாலை குடித்தோரின் சிறுநீரகம் முதலில் செயலிழந்ததும், பிறகு சிறுநீா் தடைபட்டு உயிரிழப்பு ஏற்பட்டதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடா்ந்து, பால் மாதிரியை சேகரித்து, பல்வேறு ஆய்வு கூடங்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனா். இதேபோல், பல குழுக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனா். சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மருத்துவக் குழுக்கள் ஆய்வு நடத்தி வருகின்றன என்று தெரிவித்தனா்.