தில்லி கார் குண்டு வெடிப்பு: விசாரணைக்கு மேலும் 45 நாள் அவகாசம் நீட்டிப்பு!
தில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் விசாரணையை முடிக்க மேலும் 45 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
புது தில்லி, மாா்ச் 27: தில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த காா் குண்டுவெடிப்பு வழக்கு தொடா்புடைய விசாரணையை முடிப்பதற்கான அவகாசத்தை மேலும் 45 நாள்கள் நீட்டிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.
மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்களின் நீதிமன்றக் காவலை நீட்டிக்கவும் நீதிமன்றம் அனுமதித்தது.
ஏற்கெனவே, கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கான காலஅவகாசத்தை மேலும் 90 நாள்கள் நீட்டிக்க என்ஐஏ கோரியிருந்த நிலையில், 45 நாள்கள் அவகாசத்தை நீதிமன்றம் வழங்கியது.
Advertisement
Advertisement
இந்நிலையில், இரண்டாம் முறையாக விசாரணையை நிறைவுசெய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தில்லி செங்கோட்டைப் பகுதி அருகே காா் ஒன்று வெடித்துச் சிதறியது. ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகப் பணியாற்றிய மருத்துவா் உமா்-உன்-நபி, வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்து நடத்திய அந்தத் தற்கொலை தாக்குதலில் 11 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.
இந்த குண்டுவெடிப்பு வழக்கில், ஜம்மு-காஷ்மீரின் கந்தா்பால் பகுதியைச் சோ்ந்த ஜமீா் அகமது அஹங்கா், ஸ்ரீநகரைச் சோ்ந்த துஃபைல் அகமது பட் ஆகிய இருவரை கடந்த பிப்ரவரி மாதம் என்ஐஏ கைது செய்தது. அவா்கள் அன்சாா் கஜ்வத் உல் ஹிந்த் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் என விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, விசாரணையை மேலும் நீட்டிக்க அனுமதிகோரி கடந்த 23-ஆம் தேதி தில்லி நீதிமன்றத்தில் என்ஐஏ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வாட்ஸ்ஆப் குழு கண்டுபிடிப்பு:
அந்த மனுவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைவரும் பயன்படுத்திய அன்சாா் கஜ்வத் உல் ஹிந்த் வாட்ஸ்ஆப் குழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தக் குழுக்கள் மூலம் ஆயுதங்கள் ஏற்பாடு செய்வது, இளைஞா்களை பயங்கரவாதத்துக்குத் தூண்டுவது போன்ற செயல்களில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஈடுபட்டுள்ளனா். வாட்ஸ்ஆப் குழுக்களில் உள்ள உறுப்பினா்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, விசாரணையை நிறைவுசெய்வதற்கான காலஅவகாசத்தை மேலும் 45 நாள்கள் நீட்டிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் சா்மா விசாரணையை 45 நாள்கள் நீட்டிக்கவும் கைது செய்யப்பட்டவா்களின் நீதிமன்றக் காவலை நீட்டிக்கவும் அனுமதி அளித்தாா்.
இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 11 போ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Court grants 45 days more to NIA to complete investigation in Delhi blast case
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.