என்னைக் கொல்ல சதி செய்தீர்களா?: அமித் ஷாவுக்கு மம்தா கேள்வி
என்னைக் கொல்வதற்கு சதி செய்தீர்களா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
என்னைக் கொல்வதற்கு சதி செய்தீர்களா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்கத்தில் நடைபெறும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியின் மீதான புகார்களை அடுக்கும் வகையில் அமித் ஷா "குற்றப்பத்திரிகை' ஒன்றை சனிக்கிழமை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில் "தனக்கு காயம் ஏற்பட்டதாக மம்தா சில நேரங்களில் கூறுகிறார். தேர்தல் ஆணையம் மீது அவர் சில நேரங்களில் குற்றம் சாட்டுகிறார். தான் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மம்தா நடத்தும் அரசியலை மேற்கு வங்க மக்கள் தற்போது புரிந்துகொண்டுள்ளனர்' என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள மன்பஜார் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் சந்தியா ராணி துடுவை ஆதரித்து மம்தா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் மம்தா பேசியதாவது:
தேர்தல் நேரத்தில் காயத்துக்கு போடப்படும் பேண்டேஜை அணிந்து நான் சுற்றி வருவதாக அவர்கள் (பாஜகவினர்) கூறுகின்றனர். நான் தொடர்ந்து பலமுறை மரணத்தில் இருந்து மீண்டு வந்துள்ளேன். எனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக மருத்துவர் அளித்த அறிக்கையை சரிபாருங்கள். கடந்த 2021}ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின்போது எனது காலில் காயத்தை ஏற்படுத்த நீங்கள் (அமித் ஷா) திட்டமிட்டு முயன்றீர்களா? அப்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி நான் பிரசாரம் செய்தேன். என்னைக் கொல்வதற்கு சதிசெய்தீர்களா?
தில்லியில் இருந்து நேற்று ஒரு பெரிய தலைவர் வந்தார். அவர் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை வாசித்தார். எங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீங்கள் யார்? உங்களுடைய (அமித் ஷா) கடந்த கால தவறுகளுக்காக உங்கள் மீதுதான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் மீது டொனால்ட் டிரம்ப் அரசு கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்தது. அப்போது அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் பலரும் வெளியேற்றப்பட்டனர். கால்களில் சங்கிலியை அணிவித்து குஜராத்திகளை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றியபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?
மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று நீங்கள் (மக்கள்) பார்க்க வேண்டியதில்லை. அனைத்துத் தொகுதிகளிலும் நானே வேட்பாளர். என்மீது நம்பிக்கை வைத்து வாக்களியுங்கள். அவர்கள் எவ்வளவு சதித் திட்டம் தீட்டினாலும் அதையெல்லாம் தாண்டி திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்து அரசை அமைக்கும்.
மேற்கு வங்கத்தின் ஜங்கிள்மஹால் பகுதியில் மீண்டும் வன்முறை வெடிக்கக் கூடாது. தேர்தலுக்கு முன் பணம் கொடுக்கப்பட்டால் அதை வாங்காதீர்கள். பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களிக்காதீர்கள்.
நாட்டின் ஜனநாயக அமைப்பை சீர்குலைக்க அமித் ஷாவும் பாஜகவினரும் முயற்சிக்கின்றனர். திரிணமூல் காங்கிரஸின் ஆதரவுப் பகுதிகளாக கருதப்படும் இடங்களில் மறுதேர்தலை நடத்த சதி நடக்கிறது.
தில்லியின் சதியை நான் முறியடிப்பேன். நான் அதிகாரத்தை விரும்பவில்லை. மக்கள் என்னுடன் இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன்.
என் தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. சட்டப் பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்காக எனது அரசு செயல்படுத்தி வரும் "லக்ஷ்மீர் பண்டார்' திட்டத்தை நிறுத்திவிடும். பாஜக ஆளும் மாநிலங்களில் மீன் சாப்பிடப்படுவதில்லை. மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மக்கள் மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றை சாப்பிட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார் மம்தா.
மம்தா தனது பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.