பாஜகவுக்கு மக்கள் ஆசி உண்டு: கோயிலில் வணங்கிய பிறகு வேட்பாளர்கள் பேட்டி!
தேர்தல் முடிவையொட்டி பல்வேறு தொகுதிகளின் பாஜக வேட்பாளர்கள் கோயில்களில் சாமி தரிசனம் செய்தது குறித்து...
மேற்கு வங்க சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை நாளை (மே 4) நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு தொகுதிகளின் பாஜக வேட்பாளர்கள் தொகுதிக்குட்பட்ட கோயில்களில் சாமி தரிசனம் செய்தனர்.
பாரதிய ஜனதாவுக்கு மக்களின் ஆசி எப்போதுமே உண்டு, அதனால் தேர்தலில் வெற்றி பெற்று மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைப்போம் என பாஜக பெண் வேட்பாளர் பூர்ணிமா சக்ரவர்த்தி இன்று தெரிவித்தார்.
மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலகளிலும் நாளை (மே 4) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், தொகுதியில் உள்ள கோயில்களில் பூர்ணிமா சாமி தரிசனம் செய்தார்.
Advertisement
பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
''மக்கள் ஏற்கெனவே எங்களை (பாஜகவை) ஆசிர்வதித்துள்ளனர். எங்களுக்கு கடவுளின் ஆசியும் எப்போதும் உண்டு. தர்மம் நிச்சயம் வெல்லும். அது மேற்கு வங்க மக்களின் வெற்றியாக இருக்கும். மேற்கு வங்க கலாசாரம், இளைஞர்கள் மற்றும் தாய்மார்களின் வெற்றியாக இருக்கும். கடவுளின் ஆசியைப் பெறுவதற்காக கோயிலுக்கு வந்தேன். திரிணமூல் காங்கிரஸ் கட்சி வீழ்த்தப்படும். மே 4 ஆம் தேதி இங்கு தாமரை மலரும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கும்'' என நம்பிக்கை தெரிவித்தார்.
கதல் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சீதல் கபத், விசாலாட்சி கோயிலில் சாமிதரிசனம் செய்தார்.
பின்னர் பேசிய சீதல் பதக், ''மேற்கு வங்கத்தின் எதிர்காலத்துக்காக பிரார்த்தனை செய்துகொண்டேன். எங்கள் மேற்கு வங்கத்தை நாங்கள் பாதுகாக்க வேண்டியது என் கடமை. மேற்கு வங்கத்தில் 170 - 180 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்'' எனக் குறிப்பிட்டார்.
கொல்கத்தா துறைமுகம் தொகுதி வேட்பாளர் ராகேஷ் சிங் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
''பாஜக 170-180 இடங்களுக்குள் இடங்களைப் பெறுகிறது... மேற்கு வங்க மக்களுக்கு பிரதமர் மோடியின் உத்தரவாதம் கிடைக்கிறது. 15 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த அனைத்து ரவுடிகளும், மற்றவர்களும் கவனிக்கப்படுவார்கள்.'' எனப் பேசினார்.