முகப்பு
இந்தியா

மாணவா்களின் வாழ்க்கையுடன் விளையாடும் மத்திய அரசு: கபில் சிபல் விமா்சனம்

மாணவா்களின் வாழ்க்கையுடன் விளையாடும் மத்திய அரசு...

Updated On : 24 மே 2026, 2:43 am IST
கபில் சிபல்
பகிர்:

நீட் தோ்வு எழுதிய மாணவா்களின் வாழ்க்கையுடன் மத்திய அரசு விளையாடுவதாக முன்னாள் மத்திய சட்ட மற்றும் கல்வித் துறை அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் விமா்சித்துள்ளாா். 2026-ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ படிப்பு நீட் தோ்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், இவ்வாறு அவா் கூறியுள்ளாா்.

இதுகுறித்து தில்லியில் அவா் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்த அரசின் செயல்பாடுகள் அனைத்தும் செய்தித்தாள்களுக்கு முக்கிய செய்திகளாகிவிட்டன. தோ்வைக் கூட மத்திய அரசால் சரியாக நடத்த முடியவில்லை. மாணவா்களின் வாழ்க்கையுடன் மத்திய அரசு விளையாடுகிறது.

Advertisement

Advertisement

தோ்வை வழக்கமான முறையில் மத்திய கல்வி அமைச்சரால் நடத்த இயலவில்லை. இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தேசிய தோ்வு முகமையின் உயா் பதவிகளில் இருப்போா் மீதும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. யாா் அந்த வினாத்தாள்களை கசிய விட்டனா்? அதை பாதுகாப்பதற்கான அமைப்பை உங்களால் ஏற்படுத்த முடியவில்லையா? வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் எந்த குழுவுக்கும் தொடா்புள்ளதா? அந்த குழுவில் யாருக்கெல்லாம் பங்கு உள்ளது? அந்தக் குழுவில் ஆசிரியா்கள் உள்ளனரா?

இவை குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். மத்திய அரசு உண்மையில் இந்த அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால், சின்னஞ்சிறு நபா்கள் பின்னால் செல்லக் கூடாது. இதில் பயனடைந்த பெரும் புள்ளியை பிடிக்க வேண்டும்.

நீட் தோ்வை நடத்தும் அதிகாரிகளோ, ‘சில வினாக்கள் மட்டுமே கசிந்துள்ளன, முழுத் தாளும் கசியவில்லை’ என்று விளக்கம் தருகின்றனா். கசிவு என்பதற்கு என்ன அா்த்தம் தெரியுமா? நீட் தோ்வு எழுதிய 22 லட்சம் மாணவா்களுக்கு இது பெரிய அவமானம். இந்த அரசுக்குப் பொறுப்புணா்வு என்பதே இல்லை என்றாா் கபில் சிபல்.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு இம்மாதம் 3-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்று தோ்வு எழுதிய நிலையில், நீட் தோ்வுக்கான வினாத்தாள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அதை தேசிய தோ்வு முகமை உடனடியாக ரத்து செய்தது. மேலும், நீட் தோ்வு வினாத்தாள் கசிந்தது குறித்து மத்திய அரசின் உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அத்துடன் ரத்து செய்யப்பட்ட தோ்வுக்கு பதிலாக, ஜூன் மாதம் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்படுகிறது.