நீட் மறுதேர்வு: மாணவர்களுக்கு சிற்றுண்டி, இலவசப் பேருந்து!
நீட் மறுதேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயணம்.
ஜூன் 21 ஆம்தேதி நடைபெறவிருக்கும் நீட் மறுதேர்வில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணமும், முக்கிய இடங்களில் குடிநீர், சிற்றுண்டி போன்றவை வழங்கப்படும் எனவும் பிகார் அரசு சனிக்கிழமை அறிவித்தது.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாகவே கசிந்தது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ரத்து செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.
இதனிடையே, நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்றும் இனிவரும் காலங்களில் நீட் தேர்வானது கணினிவழியில் நடத்தப்படும் என்றும் என்டிஏ அறிவித்திருந்தது.
Advertisement
Advertisement
நீட்மறுதேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து பிகார் முதல்வர் சாம்ராட் செளதரி தனது எக்ஸ் பக்கத்தில், “பிகாரில் நீட் மறுதேர்வில் பங்கேற்கவிருக்கும் தேர்வர்கள் மாநிலத்தின் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் இலவசமாகப் பயணிக்கலாம்.
மேலும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பிற முக்கிய இடங்களில், தேர்வர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்காகக் குடிநீர் மற்றும் சிற்றுண்டிகள் ஏற்பாடு செய்யப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நீட் மறுதேர்வை 100 சதவிகிதம் தவறில்லாமல் நடத்துவதை அரசு இலக்காகக் கொண்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெள்ளிக்கிழமை (மே 22) தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.