திவிஷா சர்மா மரணம்: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!
வரதட்சிணைக் கொடுமையால் மரணம்: திவிஷா சர்மா உடல் இரண்டாவது உடற்கூராய்வுக்குப் பின் தகனம்!
போபால் : வரதட்சிணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் திவிஷா சர்மாவின் உடல் தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு உடற்கூரய்வு செய்தபின் அவரது குடும்பத்தால் இன்று தகனம் செய்யப்பட்டது.
சினிமா - மாடலிங் துறையைச் சேர்ந்த திவிஷா சர்மா (33) கடந்த மே 12-இல் அவரது போபால் இல்லத்திலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
திவிஷாவின் கணவர் சமர்த் சிங் ஒரு வழக்குரைஞர் ஆவார். அவரது மாமியார் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி. இந்நிலையில், திவிஷா கணவரின் குடும்பம் அவரைக் கொடுமைப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வந்த வரதட்சிணைக் கொடுமைகளைத் தாளாமல் அவர் கடந்த மே 12-இல் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.
Advertisement
Advertisement
இதையடுத்து, வரதட்சிணைக் கொலைக்கு எதிராக நீதி கேட்டு திவிஷாவின் குடும்பத்தினர் வழக்கு தொடுத்தனர். ஆனால், வழக்கு விசாரணையில் அதிகாரிகள் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்ததாக திவிஷா குடும்பத்தினர் தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தனர்.
திவிஷாவின் உடல் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டாலும் அவரது உடலில் பல காயங்கள் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் இல்லத்தின் முன் அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனால் தேசிய அளவில் த்விஷாவின் மரணம் எதிரொலித்தது. மேலும், திவிஷா சர்மாவின் மரணத்துக்கு நீதி கேட்டு அவர்கள் சர்மாவின் உடலை வாங்க மறுத்தனர். இதையடுத்து, திவிஷா மரண வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார். திவிஷாவின் கணவர் சமர்த் சிங் காவல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், திவிஷாவின் உடலை எய்ம்ஸ் சிறப்பு மருத்துவர் குழு மறு பிரேதப் பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், அவரது உடல் மரணமடைந்தத்திலிருந்து 12 நாள்களுக்குப் பின் இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை(மே 24) எய்ம்ஸ் மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்தபின் அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடற்கூராய்வு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று தில்லி எய்ம்ஸ் தயவியல் துறைத் தலைவர் மருத்துவர் சுதீர் குப்தா தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை போபாலில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இதனிடையே, திவிஷா வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு திங்கள்கிழமை(மே 25) விசாரணைக்கு வருகிறது.
The last rites of former actor-model Twisha Sharma, who was allegedly harassed for dowry, were conducted on Sunday evening in Bhopal with her brother, Harshit, lighting the funeral pyre, marking the end of a 12-day ordeal for the family, though their quest for justice continues.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.