த்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!
வரதட்சிணைக் கொடுமையால் மரணம்: த்விஷா சர்மா உடல் இரண்டாவது உடற்கூராய்வுக்குப் பின் தகனம்!
போபால் : வரதட்சிணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் த்விஷா சர்மா உடல் எய்ம்ஸ் மருத்துவர்கள் உடற்கூரய்வு செய்தபின் அவரது குடும்பத்தால் இன்று தகனம் செய்யப்பட்டது.
சினிமா - மாடலிங் துறையைச் சேர்ந்த த்விஷா சர்மா (33) கடந்த மே 12-இல் அவரது போபால் இல்லத்திலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
த்விஷாவின் கணவர் சமர்த் சிங் ஒரு வழக்குரைஞர் ஆவார். அவரது மாமியார் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி. இந்நிலையில், த்விஷா கணவரின் குடும்பம் அவரைக் கொடுமைப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வந்த வரதட்சிணைக் கொடுமைகளைத் தாளாமல் அவர் கடந்த மே 12-இல் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.
Advertisement
Advertisement
இதையடுத்து, வரதட்சிணைக் கொலைக்கு எதிராக நீதி கேட்டு த்விஷாவின் குடும்பத்தினர் வழக்கு தொடுத்தனர். ஆனால், வழக்கு விசாரணையில் அதிகாரிகள் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்ததாக த்விஷா குடும்பத்தினர் தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தனர்.
த்விஷாவின் உடல் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டாலும் அவரது உடலில் பல காயங்கள் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் இல்லத்தின் முன் அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனால் தேசிய அளவில் த்விஷாவின் மரணம் எதிரொலித்தது. மேலும், த்விஷா சர்மாவின் மரணத்துக்கு நீதி கேட்டு அவர்கள் சர்மாவின் உடலை வாங்க மறுத்தனர். இதையடுத்து, த்விஷா மரண வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார். த்விஷாவின் கணவர் சமர்த் சிங் காவல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், த்விஷாவின் உடலை எய்ம்ஸ் சிறப்பு மருத்துவர் குழு மறு பிரேதப் பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், அவரது உடல் மரணமடைந்தத்திலிருந்து 12 நாள்களுக்குப் பின் இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை(மே 24) எய்ம்ஸ் மருத்துவர்கள் உடற்கூரய்வு செய்தபின் அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை போபாலில் அவரது தகனம் செய்யப்பட்டது. அவரது உடற்கூராய்வு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று தில்லி எய்ம்ஸ் தயவியல் துறைத் தலைவர் மருத்துவர் சுதீர் குப்தா தெரிவித்தார்.
இதனிடையே, த்விஷா மரண வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு திங்கள்கிழமை(மே 25) விசாரணைக்கு வருகிறது.