திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
தமிழ்நாட்டில், திருவாரூர் நான்கு வழி புறவழிச்சாலை அமைப்பது உள்ளிட்ட திட்டங்களுக்காக ரூ.1,427.61 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில், திருவாரூர் நான்கு வழி புறவழிச்சாலை அமைப்பது உள்ளிட்ட திட்டங்களுக்காக ரூ.1,427.61 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக "எக்ஸ்' தளத்தில் அமைச்சர் கட்கரி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில், தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.) 83-இல் உள்ள நாகப்பட்டினம் - தஞ்சாவூர் பிரிவில் 14.9 கி.மீ. தொலைவில் திருவாரூர் நான்கு வழி புறவழிச்சாலை அமைப்பதற்கும், அத்துடன் என்.எச்.-129ஏ மற்றும் என்.எச்.-134 ஏ-இல் கூடுதலாக 2 மேம்பாலங்கள் அமைப்பதற்கும் ரூ.1,427.61 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டம், திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூர் போன்ற முக்கிய தொழில் மையங்களுக்கும், காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் துறைமுக நகரங்களுக்கும் இடையிலான இணைப்பை வலுப்படுத்தி, பிராந்திய பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும்.
Advertisement
Advertisement
அடியக்கமங்கலம்-தண்டலையில் தொடங்கும் இந்தப் புறவழிச்சாலை, ஆதிப்புலியூர், ஆண்டிபாளையம், கிடாரம்கொண்டான், பள்ளிவரமங்கலம், பெரும்புகலூர், இளவங்காருக்குடி மற்றும் ஆனைவடபதி காலனி உள்ளிட்ட முக்கிய இடங்கள் வழியாகச் செல்லும்.
இது நிறைவடைந்ததும், திருவாரூர் நகரின் போக்குவரத்து நெரிசலைக் கணிசமாகக் குறைத்து, பயண நேரத்தை சுமார் 15 நிமிஷங்கள் வரை குறைக்கும்.
மேலும், அதிக மக்கள் அடர்த்தி கொண்ட மற்றும் வணிகப் பகுதிகளிலிருந்து போக்குவரத்தைத் திசைதிருப்புவதன் மூலம் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும்.
இந்த வழித்தடம், மாநில நெடுஞ்சாலை (எஸ்.எச்.) 23, 65 மற்றும் புகழ்பெற்ற தியாகராஜ சுவாமி கோயிலுக்கான இணைப்பையும் மேம்படுத்தி, இப்பகுதியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் பயண எளிமைக்கும் பங்களிக்கும் என அந்தப் பதிவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.