மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக மமதா பானர்ஜி மீது வழக்குப்பதிவு!
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி மீது வழக்குப்பதிவு.
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகப் பேசியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ரிங்கி சட்டோபாத்யாய சிங் என்ற வழக்கறிஞர் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் மே 20 அன்று இந்தப் புகாரை அளித்துள்ளார்.
அந்தப் புகாரின்படி, 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு மத நிகழ்விலும், சட்டப்பேரவைத் தேர்தலின்போது தர்மசாலாவில் நடைபெற்ற போராட்டத்திலும் அவர் பேசிய கருத்துகள் இந்தியா மற்றும் உலகம் முழுவதுமுள்ள பல லட்சக்கணக்கான சனாதன ஹிந்துக்களின் நம்பிக்கையைப் புண்படுத்தும்படி இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், அவர் பேசிய கருத்துகள் அரசியலமைப்புக்கு விரோதமானவை என்று புகார்தாரர் குற்றம் சாட்டினார்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் நினைத்தால் 5 நிமிடங்களுக்குள் மற்றவர்களை முடித்துக்கட்ட முடியும் என்று மமதா கூறியதாகவும், அரசியலமைப்பைச் சார்ந்த பதவியில் இருக்கும் ஒருவரிடமிருந்து இதுபோன்ற கருத்துக்களை எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தப் புகாரை முதலில் காவல்துறையினர் பதிவு செய்ய மறுத்த நிலையில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த காரணத்தால் மட்டுமே பதிவு செய்ததாகக் கூறினார்.
இதுபற்றிப் பேசிய காவல்துறையினர், “எங்களிடம் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து விவரங்களும் ஆராயப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.